காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ள நிலையில், தமிழகத்தின் உரிமையையும் விவசாயிகளின் நலனையும் பாதுகாக்க சட்டப் போராட்டத்தை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் காவிரி நதிநீர் வல்லுநர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு எதிராக அமையக்கூடிய மேகேதாட்டு அணைத் திட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு அரசு இதுவரை மேற்கொண்ட சட்டப் போராட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, கடந்த 30.11.2018 மற்றும் 07.06.2022 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுக்கள் குறித்து ஆராயப்பட்டது.
கடந்த 13.11.2025 அன்று இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மேகேதாட்டு அணை திட்டத்திற்கு எந்த அனுமதியும் வழங்கவில்லை என்றும், இது ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும், இந்த திட்டம் முந்தைய தீர்ப்புக்கு உட்பட்டதா என்பதை மத்திய நீர்வளக் குழுமமே தீர்மானிக்க முடியும் என்றும் கூறி வழக்கை முடித்து வைத்தது. மேலும், உச்ச நீதிமன்றத்தில் 13.11.2025 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பினை எதிர்த்து, தமிழ்நாடு அரசால் சீராய்வு மனு 11.12.2025 அன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த சீராய்வு மனு முந்தைய ஆட்சிக் காலத்தில் உச்ச நீதிமன்றத்தில் உள்விசாரணை நடைபெற்று தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு, தற்சமயம் உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த தீர்ப்பு விவரங்களைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டவும், விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்கவும் தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்க வேண்டும் என முதல்வர் விஜய் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த், பொதுப் பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, எரிசக்தி வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.