சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏழை, எளிய, நடுத்தர மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் திரும்பப் பெற வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருப்பதால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் லிட்டருக்கு தலா 3 ரூபாயும், இயற்கை எரிவாயு விலை 2 ரூபாயும் நள்ளிரவு முதல் உயர்த்தப்பட்டு புதிய விலைகள் அமலுக்கு வந்துள்ளன. வளைகுடா நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் இறக்குமதியில் தடங்கல் ஏற்பட்டதும், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட நிதி இழப்பும் இந்த விலை உயர்வுக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த விலை உயர்வால் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏழை, எளிய மக்கள் பல்வேறு பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும். பொதுப் போக்குவரத்துக் கட்டணம் அதிகரிப்பதோடு, மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் பல மடங்கு உயர்ந்து, அவர்களுக்குப் பெரும் பொருளாதாரச் சிக்கலை ஏற்படுத்தும்.
எனவே, பெட்ரோல், டீசல் விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் திரும்பப் பெறுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என டிடிவி தினகரன் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.