நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், வெளிநாட்டு குடியுரிமை பெற்ற சுமார் 25 பேர் முறைகேடாக வாக்களித்தது கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக திமுக எம்.பி. வில்சன், 'வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடைமுறை முழுமையான பாதுகாப்புடன் இல்லை' என கடுமையாக விமர்சித்துள்ளார்.
போலியான ஆவணங்கள் மூலம் இந்திய குடிமக்கள் என காட்டிக்கொண்டு, வாக்காளர் பட்டியலில் தங்களை இணைத்துக்கொண்டு இவர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடைமுறையின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. இது வாக்காளர் பட்டியலின் நம்பகத்தன்மையையும், ஒட்டுமொத்த தேர்தல் நடைமுறையையும் பாதிக்கிறது.
வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றவர்கள் இந்தியாவில் வாக்களிக்க முடியாது. இருப்பினும், சிலர் இந்திய பாஸ்போர்ட்டுகளை ரத்து செய்யாமல், வெளிநாட்டு குடியுரிமை பெற்றும், இந்திய வாக்காளர் அட்டைகளைப் பெற்றுள்ளனர். சென்னை, திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட விமான நிலையங்களில் குடிவரவு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
வாக்களித்ததற்கான அடையாள மை விரல்களில் இருந்தும், வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்களாக இருந்தும், பலரை விமான பயணங்களுக்கு அனுமதிக்காமல், கைது செய்து காவல் நிலையங்களில் ஒப்படைத்தனர். சென்னை உட்பட தமிழகம் முழுவதும் சுமார் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஆஸ்திரேலியா, இலங்கை, கனடா, ஐரோப்பா போன்ற நாடுகளில் குடியுரிமை பெற்றவர்கள் ஆவர். இதுகுறித்து முழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.