புதுடெல்லி: சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதில் எழுந்த சர்ச்சை குறித்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பொறுப்பேற்றுள்ளார். மதிப்பிடும் முறையில் முறைகேடுகள் கண்டறியப்பட்டால் யாரும் தப்பிக்க முடியாது என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
டிஜிட்டல் விடைத்தாள் மதிப்பிடும் (On Screen Marking – OSM) முறையில் மதிப்பெண் தாள்கள் ஸ்கேன் செய்யப்பட்டதில், அதன் பிரதிகள் மங்கலாக இருந்ததாகவும், சில விடைகள் சரிபார்க்கப்படாமல் விடப்பட்டதாகவும், இணையதளம் செயலிழந்ததாகவும், கட்டணம் செலுத்துவதில் சிக்கல்கள் ஏற்பட்டதாகவும், மறுமதிப்பீட்டு செயல்முறையிலும் குழப்பங்கள் நிலவுவதாகவும் சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் புகார்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் சிபிஎஸ்இ அதிகாரிகளுடன் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைகளுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தர்மேந்திர பிரதான், ‘ஓஎஸ்எம் முறையில் மதிப்பீட்டில் மாணவர்களின் மதிப்பெண்கள் குறைந்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்தச் சம்பவத்துக்கு நான் பொறுப்பேற்கிறேன். இது சரிசெய்யப்படும், தீர்வு காணப்படும். நாங்கள் அனைவரும் அதற்கான பணியில் ஈடுபட்டுள்ளோம். தேர்வு எழுதிய 17 லட்சம் மாணவர்களின் விடைத்தாள்களை நாங்கள் பாதுகாத்து வைத்துள்ளோம். ஓஎஸ்எம் முறை என்பது உலக அளவில் பல்வேறு கல்வி நிறுவனங்களால் பின்பற்றப்படும் ஒரு முற்போக்கான முறை. இது மாணவர்களை மையமாகக் கொண்டது. மாணவர்களுக்காகவே வடிவமைக்கப்பட்டது. இதன்மூலம், தங்கள் மதிப்பெண்கள் குறித்த வெளிப்படையான தகவல்களை அவர்கள் பெறுவது உறுதி செய்யப்படுகிறது.
ஓஎஸ்எம் முறை அரசின் விதிகளுக்கு உட்பட்டே நடைபெற்றுள்ளது. இதில், ஏதேனும் முறைகேடுகள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட யாரும் தப்ப மாட்டார்கள். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பியது குறித்து கேட்கிறீர்கள். அரசியலை நாம் பின்னர் வைத்துக்கொள்ளலாம். தற்போதைய சூழலில் மாணவர்களின் மன உளைச்சல் மேலும் அதிகரிக்காமல் இருப்பதே மிக முக்கியம். மாணவர்களிடையே பதற்றத்தை அதிகரிக்கும் வகையிலான கருத்துகளை அரசியல் தலைவர்களும் பொதுமக்களும் வெளியிட வேண்டாம்’ என்று கேட்டுக்கொண்டார். சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள அறிக்கையில், பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் பலர் தங்கள் மதிப்பெண்கள் குறித்து வருத்தத்துடன் இருப்பதாகவும், அதற்கு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஓஎஸ்எம் முறையே காரணம் என்றும் கருதுவதாக சமூக வலைதளங்கள் வழியாக தகவல்கள் வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. மாணவர் நலனில் சிபிஎஸ்இ எப்போதும் அக்கறை கொண்டுள்ளது என்றும், புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஓஎஸ்எம் நடைமுறையானது, அனுபவமிக்க ஆசிரியர்கள் தயாரித்த மதிப்பிட்டு திட்டத்தின் அடிப்படையில், ஒரே மாதிரியான மற்றும் சீரான மதிப்பிட்டை உறுதி செய்யும் என்றும், மேலும் அந்த மதிப்பிட்டில் மாற்று முறைகளில் எழுதப்பட்ட பதில்களுக்கும், மதிப்பெண் பெறும் வகையில் வழி காட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளது. எனினும் மாணவர்களுக்கு தங்கள் தேர்வு முடிவில் திருப்தி இல்லை எனில், மறுகூட்டல், திருத்தப்பட்ட விடைத்தாள்களைப் பார்வையிடுதல் மற்றும் மறுமதிப்பீடு கோரலாம். தேர்வு முடிவுகள் தொடர்பாக கவலை அடைந்துள்ள மாணவர்களுக்கு இலவச ஆலோசனை சேவையும் 1800-11-8004 என்ற தொலைபேசி வழியாக வழங்கப்படுகிறது. மேலும் resultcbse2026@gmail.com என்ற மின்னஞ்சல் வழியாகவும் மாணவர்கள் தொடர்பு கொள்ளலாம் என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.