நாடு முழுவதும் வெப்ப அலை தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். வழக்கத்திற்கு மாறாக சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க மக்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டாலும் பலனளிக்கவில்லை. குறிப்பாக வட இந்தியாவில் வெயிலின் தாக்கம் அதிகமாகக் காணப்படுகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் பாண்டாவில் அதிகபட்சமாக 117.68 டிகிரி பாரன்ஹீட் (47.6 டிகிரி செல்சியஸ்) வெப்பம் பதிவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப், அரியானா போன்ற வடமாநிலங்களிலும் 47 டிகிரி முதல் 48 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நாடு முழுவதும் வெப்பத்தின் தாக்கம் மேலும் தீவிரமடையும் என எச்சரித்துள்ளது. வடமேற்கு இந்தியாவில் மே 24 முதல் மே 29 வரை தொடர்ச்சியான வெப்ப அலை வீசக்கூடும். மத்திய இந்தியாவில் அடுத்த 6 நாட்களுக்கு வெப்ப அலை முதல் தீவிர வெப்ப அலை வரை நீடிக்கும். டெல்லியில் இரவு நேரங்களிலும் சூடான காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானாவில் மட்டும் வெப்பத்தின் தாக்கத்தால் நேற்று 16 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது மொத்த உயிரிழப்பு 34 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் ஹீட் ஸ்ட்ரோக்கால் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வெப்ப அலையிலிருந்து தப்பிக்க அதிக தண்ணீர் குடிக்க வேண்டும், உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க வேண்டும், பருத்தி ஆடைகளை அணிய வேண்டும், மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும், நீரேற்றம் நிறைந்த பழங்கள் மற்றும் திரவ உணவுகளை உட்கொள்ள வேண்டும், குழந்தைகள் மற்றும் பெரியவர்களைக் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.