நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலை கடுமையாக வீசி வருவதால், பொதுமக்கள் அனைவரும் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டதாவது: 'இந்தியாவின் பல பகுதிகளில் வெப்ப அலை அதிகரித்து வருவது சவாலாக உள்ளது. இந்த வெப்பம் நம் அனைவருக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே, அனைவரும் முடிந்தவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். அதிக அளவில் தண்ணீர் அருந்துங்கள். வெளியே செல்லும்போது உங்களுடன் தண்ணீரை எடுத்துச் செல்லுங்கள். மற்றவர்களுக்கும் தண்ணீர் கொடுங்கள். இந்த வெப்பமான காலக்கட்டத்தில், இதுபோன்ற உதவிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.'
மேலும், அவர் தனது பதிவில், 'தலைச்சுற்றல், குமட்டல், அதீத சோர்வு போன்ற வெப்பத்தினால் ஏற்படும் அறிகுறிகளை கவனியுங்கள். உங்களைச் சுற்றியுள்ள ஒருவர் வழக்கத்திற்கு மாறாக உடல்நலக்குறைவாகவோ, பலவீனமாகவோ உணர்ந்தால், தலைவலி ஏற்பட்டால் அவர்களை உடனடியாக குளிர்ச்சியான அல்லது நிழலான இடத்துக்கு அழைத்துச் செல்லுங்கள். அவர்களுக்கு தண்ணீர் அல்லது ஓஆர்எஸ் கரைசல் கிடைப்பதை உறுதி செய்யுங்கள். குறிப்பாக, குழந்தைகள், முதியவர்கள், வெளியில் வேலை செய்பவர்கள் இந்த அதீத வெப்பத்தால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த எச்சரிக்கை அறிகுறிகளைப் புறக்கணிப்பது ஆபத்தானதாக மாறக்கூடும், heatstroke ஏற்படவும் வழிவகுக்கும். சரியான நேரத்தில் வழங்கப்படும் கவனிப்பு பெரிதும் உதவும். முடிந்தபோதெல்லாம் வயதான பெற்றோர்கள், தாத்தா, பாட்டி உள்ளிட்ட அன்புக்குரியவர்களை தொலைபேசியில் அழைத்து நலம் விசாரியுங்கள். அவர்கள் அதிக அளவில் தண்ணீர் குடிக்கவும், நண்பகல் நேரங்களில் வெளியே செல்வதைத் தவிர்க்கவும், முடிந்தபோதெல்லாம் ஓய்வெடுக்கவும் நினைவூட்டுங்கள்.' என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கடினமான நாட்களில் நம்மைச் சுற்றியுள்ள பறவைகளையும் விலங்குகளையும் நினைவில் கொள்வோம். உங்கள் வீடு, பால்கனிகள், கடைகள், அலுவலகங்கள் ஆகியவற்றுக்கு வெளியே ஒரு சிறிய பாத்திரத்தில் தண்ணீர் வைப்பது தாகமாக இருக்கும் பறவைக்கு உயிர்காக்கும் மருந்தாக அமையலாம். இந்த கடினமான நாட்களில் கருணை நம்மை வழிநடத்தட்டும்' என்றும் பிரதமர் மோடி தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சத்தீஸ்கர், கிழக்கு உத்தரப் பிரதேசம், கிழக்கு மத்தியப் பிரதேசம், உத்தராகண்ட், ஹரியானா, ராஜஸ்தான், பிஹார், ஒடிசா, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் பஞ்சாப், டெல்லி போன்ற மாநிலங்களில் கடுமையான வெப்ப அலை நிலவுகிறது. மே 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி பகுதிகளில் கடும் வெப்ப அலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.