இந்தியாவின் முன்னணி பால் உற்பத்தி நிறுவனமான அமுல், நாடு தழுவிய அளவில் பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு நாளைமுதல் (மே 14) முதல் அமலுக்கு வருவதாக குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
அமுல் கோல்டு, அமுல் தாசா, அமுல் பசு பால், எருமைப் பால், அமுல் ஸ்லிம் என் ட்ரிம் உள்ளிட்ட அனைத்து வகை பால்களுக்கும் இந்த விலை ஏற்றம் பொருந்தும். இதனால், நுகர்வோர் பாலுக்காக கூடுதலாக செலவிட வேண்டியிருக்கும்.
பால் உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் எதிர்கொள்ளும் உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளதன் காரணமாகவே இந்த விலை உயர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பால் கூட்டுறவு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மேலும் கூறுகையில், 'தற்போதைய சூழலில், பால் உற்பத்தியை திறம்பட தொடர, இந்த விலை உயர்வு அவசியமாகிறது' எனத் தெரிவித்துள்ளது.
இந்த விலை உயர்வு, பால் சார்ந்த பிற பொருட்களின் விலையையும் பாதிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமுல் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு, நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான பால் நுகர்வோரிடையே ஒருவித கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.