தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே குடும்ப தகராறு காரணமாக மனமுடைந்த ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலத்தெருவைச் சேர்ந்த வெயில்முத்து (48) என்பவர் கயத்தாறில் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். இவருக்கு சேர்மத்தாய் என்ற மனைவியும், மல்லிகை, முத்துராஜ் என்ற இரு குழந்தைகளும் உள்ளனர். வெயில்முத்துவுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாகவும், இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு, மனைவி சேர்மத்தாய் குழந்தைகளுடன் கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார்.
தன்னுடன் மீண்டும் குடும்பம் நடத்த வருமாறு வெயில்முத்து பலமுறை அழைத்தும், மதுப் பழக்கத்தைக் காரணம் காட்டி மனைவி வர மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான வெயில்முத்து, நேற்று தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நீண்ட நேரமாக வெயில்முத்துவின் வீட்டுக்கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர், ஜன்னல் வழியாகப் பார்த்தபோது அவர் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக கயத்தாறு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் காந்திராஜன் ஆகியோர் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.