இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், வரும் 21-ந் தேதி மறுதேர்வு நடைபெற உள்ளது. இந்த மறுதேர்வை எழுதும் மாணவர்களுக்கு பீகார் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என பீகார் மாநில முதல்-மந்திரி சாம்ராட் சவுத்ரி அறிவித்துள்ளார்.
தனது 'எக்ஸ்' பக்கத்தில் இந்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார். இருப்பினும், இந்த இலவச பயணச் சலுகை தேர்வு நாளன்று மட்டும் கிடைக்குமா அல்லது தேர்வு நாள் வரை அனைத்து நாட்களிலும் கிடைக்குமா என்பது குறித்து அவர் மேலும் எந்த விவரங்களையும் தெரிவிக்கவில்லை.
மேலும், நீட் மறுதேர்வு எழுத வரும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்காக, பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகங்களுக்கு முதல்-மந்திரி சாம்ராட் சவுத்ரி உத்தரவிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பு, நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஒரு பெரிய நிம்மதியை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு இது பேருதவியாக இருக்கும்.