ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 57வது லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, 3 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூரில் நடைபெற்ற இப்போட்டியில், மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. போட்டி தொடங்கியதும், டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் ரஜத் படிதார் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது.
கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ரகானே மற்றும் பின் ஆலன் நிதானமாகத் தொடங்கினர். பின் ஆலன் 18 ரன்களிலும், ரகானே 19 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதைத் தொடர்ந்து ரகுவன்ஷி களமிறங்கி, கிரீனுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் கிரீன் 24 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து போல்ட் ஆனார். மறுமுனையில் அதிரடியாக ஆடிய ரகுவன்ஷி 32 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார்.
ரகவன்ஷியுடன் இணைந்த ரிங்கு சிங், ஆட்டத்தின் வேகத்தை அதிகரித்தார். இருவரும் அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். சிறப்பாக விளையாடிய ரிங்கு சிங் 29 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் குவித்தது. பெங்களூரு அணியின் பந்துவீச்சில், புவனேஷ்வர் குமார், ஹேசில்வுட், சலாம் தார் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
இதையடுத்து, 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி தனது இன்னிங்ஸை தொடங்க உள்ளது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று பிளே-ஆப் வாய்ப்பை பெங்களூரு அணி பிரகாசப்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.