ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, தமிழக முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் தங்களது இனிய வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் விஜய் தனது வாழ்த்துச் செய்தியில், இறைவனின் கட்டளைக்கிணங்க தனது ஒரே மகன் இஸ்மாயிலை தியாகம் செய்யத் துணிந்த இப்ராஹிம் நபியின் உன்னதமான இறை பக்தியையும், தியாகத்தையும் நினைவு கூரும் வகையில் பக்ரீத் திருநாள் கொண்டாடப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். இறை நம்பிக்கை, தியாகம், கருணை, பகிர்வு, மனித நேயம் ஆகிய உயரிய விழுமியங்களை மனித குலத்திற்கு உணர்த்தும் புனிதப் பெருநாளாக பக்ரீத் திகழ்வதாகவும், ஏழை, எளிய மக்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதையும், சமூகத்தில் அன்பும், சமத்துவமும் நிலைக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தும் இந்த நன்னாளில், சமுதாயத்தில் மனித நேயமும், மத நல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்கிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தியாகத் திருநாளான பக்ரீத் திருநாளில் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் தனது இனிய வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 'ஈத்துவக்கும் இன்பம்' என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க, ஈட்டிய பொருளில் ஒரு பகுதியை ஏழை, எளியோர் இன்னல் தீர வழங்கி மகிழ்வதை வாழ்வறமாகக் கொண்டு, நபிகள் நாயகம் வழங்கிய அறிவுரைகளை வாழ்க்கை நெறியாகக் கடைப்பிடித்து வாழும் இஸ்லாமியப் பெருமக்களது வாழ்வில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலைபெற வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்லாமிய சமூகத்திற்கும் திமுகவுக்கும் இடையேயான உறவு, அரசியல் மற்றும் சமூகக் காரணங்களைத் தாண்டிய ஆழத்தையும், மேன்மையையும், உண்மையான பிணைப்பையும் கொண்டது என்றும், திமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், இஸ்லாமிய சமூகத்தின் பாதுகாப்புக்காகவும் உரிமைகளுக்காகவும் தோளோடு தோள் நின்று போராடும் உணர்வைக் கொண்ட உற்ற தோழமை என்றும் அவர் மேலும் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இறை நம்பிக்கை உள்ளவர்கள் எந்தத் தியாகத்திற்கும் தயங்க மாட்டார்கள் என்ற தத்துவத்தைப் பறைசாற்றும் திருநாளாம் ‘பக்ரீத்’ திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் தனது இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இறைவனின் விருப்பத்திற்கு கீழ்படிந்து வாழ்வதே சிறந்த வாழ்க்கை நெறி என்று உலகிற்கு பறைசாற்றும் பொன்னாள் இந்நாளாகும் என்றும், நாட்டின் வளர்ச்சிக்கும், சமுதாய முன்னேற்றத்திற்கும் தடைக் கற்களாகத் திகழ்கின்ற அதர்மம், அநீதி, சூழ்ச்சி, வன்மம் ஆகியவற்றை வேரோடும், வேரடி மண்ணோடும் ஒழித்து, நற் சிந்தனைகளும், நன்னெறிகளும் வெற்றி பெற எண்ணற்ற தியாகங்களும், அர்ப்பணிப்புகளும் தேவைப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இறைத் தூதரின் தியாகங்களை மனதில் நிலைநிறுத்தி, மனித நேயம் தழைக்க அர்ப்பணிப்பு உணர்வுடன் பாடுபடுவோம் என இந்த பக்ரீத் திருநாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.