சென்னை: தமிழகத்தில் விளையாட்டுத் துறையை கல்வித் துறைக்கு நிகராக மேம்படுத்த விரிவான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாக விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். சென்னை நேரு விளையாட்டு அரங்கில் இன்று ஆய்வு மேற்கொண்ட அவர், அங்குள்ள மாணவர்களுடனும் பயிற்சியாளர்களுடனும் கலந்துரையாடி அவர்களின் தேவைகளை கேட்டறிந்தார்.
கடந்த 1994-ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற சர்வதேசப் போட்டிகளுக்குப் பிறகு, தமிழகத்தில் பெரிய அளவிலான போட்டிகள் நடைபெறவில்லை என்றும், அதற்கான உள்கட்டமைப்புகள் போதுமானதாக இல்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். இந்த உள்கட்டமைப்புகளை மேம்படுத்த அரசு முனைப்பு காட்டி வருவதாகவும் அவர் கூறினார்.
விளையாட்டுத் துறையை மேம்படுத்துவதன் மூலம் மாணவர்களிடையே போதைப் பழக்கத்தைக் குறைத்து, அவர்களை நல்வழிப்படுத்த முடியும் என அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார். இந்தப் போக்கைக் கருத்தில் கொண்டு, கல்விக்கு இணையாக விளையாட்டுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது.
தற்போது நமது வீரர்கள் பெரும்பாலும் தேசிய அளவிலான போட்டிகளிலேயே கவனம் செலுத்துவதாகவும், ஒலிம்பிக் போன்ற சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்பது குறித்த விழிப்புணர்வு அவர்களிடம் குறைவாக இருப்பதாகவும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குறிப்பிட்டார். வெளிநாடுகளைப் போல், தமிழகத்திலும் சிறு வயது முதலே வீரர்களை தயார் செய்து, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ஊக்குவிக்கப்படும் என்றும், இதற்காக 8 வயதிலிருந்தே விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.