சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, கவிஞர் வைரமுத்து நேற்று நேரில் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு தொடர்பாக அவர் தனது எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், "மே 4ஆம் தேதி சந்தித்த தளபதி மு.க.ஸ்டாலினை நேற்று மீண்டும் சந்தித்தேன். அப்போது உதயநிதி ஸ்டாலின் மற்றும் சபரீசன் உடனிருந்தனர். "இன்றைய மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் உங்கள் பேச்சு, தப்பித்து ஓடும் போக்கு இல்லாத தலைமைப் பண்பை வெளிப்படுத்தியது" என்று அவரிடம் கூறினேன்."
"அவரது முகத்திலும் உடல்மொழியிலும் எந்த ஒரு தோல்வியின் சாயலும் தெரியவில்லை. மாறாக, இன்னும் பல ஆண்டுகள் உழைப்பதற்கான ஊட்டமும், ஊக்கமும் அவரிடம் இருப்பதாகவே தோன்றியது. அவரது தோல்வியை எதிரிகள் கூட ரசிக்கவில்லை" என்று வைரமுத்து குறிப்பிட்டுள்ளார். "இரவு என்பது அடுத்த பகலைத் தயாரிக்கிறது; தோல்வி என்பது அடுத்த வெற்றியைத் தயாரிக்கிறது" என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பேரறிஞர் அண்ணாவுக்கும், மு.க.ஸ்டாலினுக்கும் இடையே வரலாறு ஒரு ஒற்றுமையை ஏற்படுத்தியிருப்பதாக வைரமுத்து தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார். 1962ஆம் ஆண்டு தேர்தலில் திமுக 50 சட்டமன்ற உறுப்பினர்களை வென்றெடுத்தாலும், அண்ணா தோல்வியடைந்தார். ஆனாலும், அவர் சட்டமன்றம் செல்லாமல், தனது தம்பிமார்களை அனுப்பி வைத்தார். அப்போது அண்ணா கூறியதாக ஒரு சம்பவத்தை வைரமுத்து மேற்கோள் காட்டினார்.
"ஐரோப்பாவில் இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே போர் மூண்டபோது, கிறிஸ்தவர்கள் ஜெருசலத்திற்குள் நுழையக்கூடாது என இஸ்லாமியர்கள் தடை விதித்தனர். இஸ்லாமியர்களுக்கு சாலடி மன்னனும், கிறிஸ்தவர்களுக்கு ரிச்சர்ட் மன்னனும் தலைமை தாங்கினர். இறுதியில், 'கிறிஸ்தவர்கள் அனைவரும் ஜெருசலத்திற்குள் வரலாம், ஆனால் கிறிஸ்தவர்களின் தலைவனான ரிச்சர்ட் தவிர' என்ற நிபந்தனையுடன் போர் நிறுத்தம் ஏற்பட்டது. அதைப் போலத்தான் அண்ணா வெளியே நின்றார், தம்பிமார்கள் சட்டமன்றம் சென்றனர்" என்று அண்ணா கூறியதாக வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.
"இப்போது 2026ஆம் ஆண்டிலும் வரலாறு மீண்டும் வட்டமடிக்கிறது. தளபதி (ஸ்டாலின்) வெளியே நிற்கிறார், தளகர்த்தர்கள் சட்டமன்றம் செல்கிறார்கள். அண்ணா மீண்டு வந்தார், ஸ்டாலினும் வருவார்" என்று அவர் தனது பதிவை நிறைவு செய்துள்ளார்.