சென்னையின் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றான தாம்பரம், இந்தியாவின் மூன்றாவது பெரிய ரயில் முனையமாக திகழ்கிறது. தினந்தோறும் சுமார் 1.6 லட்சம் பயணிகள் இந்த ரயில் நிலையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அவர்களைக் கவரும் வகையில் ரூ.24 கோடி மதிப்பீட்டில் தாம்பரம் ரயில் நிலையம் நவீனமயமாக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
பயணிகளின் வசதிக்காக, ரயில் நிலையத்தின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளை இணைக்கும் வகையில், அனைத்து நடைமேடைகளையும் கடந்து செல்லும் 8 மீட்டர் அகலமுள்ள புதிய நடைமேம்பாலம் ஒன்று பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இது பயணிகளின் நெரிசலைக் குறைப்பதோடு, ஒரு நடைமேடையில் இருந்து மற்றொரு நடைமேடைக்கு எளிதாகச் சென்று வரவும் வழிவகுக்கும். ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள பழைய நடைமேம்பாலமும் தொடர்ந்து செயல்படும்.
மேலும், பயணிகளின் சிரமமின்றி பயணிக்க 9 மின்தூக்கிகள் மற்றும் 10 நகரும் படிக்கட்டுகள் அமைக்கும் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், 6 மின்தூக்கிகள் ஏற்கெனவே நிறுவப்பட்டுவிட்டன. மீதமுள்ளவை விரைவில் நிறுவப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும். நகரும் படிக்கட்டுகளுக்கான சிவில் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
புதிய நடைமேம்பாலத்திற்குச் செல்ல கூடுதல் சாலை வசதி, மேற்குப் பகுதியில் வாகன நிறுத்துமிடத்துடன் கூடிய சுற்றுப்புறப் பகுதி மேம்பாடு, நடைமேடைகளில் மேற்கூரைகள் அமைத்தல் போன்ற பல திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகள் அனைத்தும் நிறைவடையும் தருவாயில், தாம்பரம் ரயில் நிலையம் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள், குழந்தைகள் மற்றும் சுமைகளுடன் வரும் பயணிகளுக்கு மிகவும் பாதுகாப்பான, நவீன மற்றும் வசதியான பயண அனுபவத்தை வழங்கும் என தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் தெரிவித்துள்ளது.