சென்னையில் ஆட்டோவில் குட்கா கடத்தி விநியோகித்து வந்த நபரை கைது செய்த போலீஸார், அவரிடம் இருந்த 445.5 கிலோ குட்கா புகை யிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
சென்னை காவல் ஆணையரின் உத்தரவின் பேரில், மாநகரம் முழுவதும் போதைப் பொருட்களுக்கு எதிரான தீவிர கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, சூளைமேடு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினர், அரும் பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக வந்த ஆட்டோ ஒன்றை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி போலீஸார் சோதனை செய்தனர். அப்போது, ஆட்டோவில் இருந்த மூட்டைகளில் குட்கா புகையிலை பாக்கெட்டுகள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, ஆட்டோவை ஓட்டி வந்த கொடுங்கையூர் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த வெற்றிவேல் (45) என்பவரை போலீஸார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், தலைமறை வாக உள்ள சில நபர்களின் அறி வுறுத்தலின் பேரில், அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த இலகுரக சரக்கு வாகனத்தில் (மினி லாரி) இருந்து குட்கா மூட்டைகளை ஆட்டோவுக்கு மாற்றி, நகரின் வேறு பகுதிக்கு விநியோகம் செய்ய முயன்றது தெரிய வந்தது.
பின்னர், அங்கு சென்று அந்த சரக்கு வாகனத்தையும், அதிலிருந்த குட்கா புகையிலை பாக்கெட்டுகள் அடங்கிய மூட்டைகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்த சோதனையில்,மொத்தம் 445.5 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், நடைபெற்ற விசாரணையில் பிடிபட்ட வெற்றிவேல் மீது ஏற்கனவே திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் குட்கா கடத்தல் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது தெரிய வந்தது. இந்த கடத்தல் சம்பவத்தில் பின்னணியில் உள்ள முக்கிய நபர் களையும் போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.