மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே 17 வயது சிறுவன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சித்திரை திருவிழாவின் போது ஏற்பட்ட மோதல் இந்த கொலைக்கு காரணமாக அமைந்துள்ளது.
சம்பவத்தின் பின்னணி என்னவென்றால், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் போது, 17 வயது சிறுவன் குபேந்திரனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த முத்துமணி என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றி, இருவரும் ஒருவரையொருவர் தாக்கி காயப்படுத்திக் கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த முத்துமணி, குபேந்திரனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில், மீனாட்சி அம்மன் கோயில் கார் பார்க்கிங் அருகே குபேந்திரன் தனியாக நின்று கொண்டிருந்தபோது, முத்துமணியும் அவரது தம்பி ராஜ்ஜூம் இருசக்கர வாகனங்களில் வந்துள்ளனர். அவர்கள் குபேந்திரனை விரட்டிச் சென்று கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் குபேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், குபேந்திரனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொடூர கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தப்பியோடிய முத்துமணி மற்றும் ராஜ்ஜூரை தீவிரமாக தேடி வருகின்றனர்.