சென்னையை அடுத்த சூரப்பட்டு பகுதியில் தனியாக வசித்து வந்த 70 வயது மூதாட்டி பொன்னம்மாள், நகை மற்றும் பணத்துக்காக கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் நிலத்தரகர் பழனி மற்றும் ஆட்டோ ஓட்டுநர் துளசிதாஸ் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூரப்பட்டு, துளுக்கானத்தம்மன் கோயில் 7-வது தெருவைச் சேர்ந்த பொன்னம்மாள், தனது கணவர் 2006-ல் இறந்த பிறகு தனியாக வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு 6 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு 7.45 மணியளவில் ஆட்டோவில் வந்த இருவர், இரவு 8.45 மணியளவில் திரும்பிச் சென்றுள்ளனர். இதை சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், பொன்னம்மாள் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, அவர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையிலும், முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் காயங்களுடனும் இறந்து கிடந்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த புதூர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொன்னம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பொன்னம்மாளின் 5-வது மகள் கெஜலட்சுமி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பொன்னம்மாள் தனது குடும்பத்திற்கு சொந்தமான சுமார் 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை விற்பனை செய்ய ஏற்பாடு செய்து, அதில் 31 லட்சம் ரூபாயை முன்பணமாக பெற்றுள்ளார். இந்த பணத்தை தனது 6 மகள்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் என பிரித்துக் கொடுத்துவிட்டு, மீதி தொகையை வங்கிக் கணக்கில் வைத்திருந்தது தெரியவந்துள்ளது.
நிலத்தை விற்பனை செய்வதில் இடைத்தரகராக செயல்பட்ட பழனி, இந்த முன்பணத் தொகை வீட்டில் இருப்பதாக நினைத்து, அதை கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளார். நிலத்தை வாங்கியவரிடம் இருந்து பெற்ற பணத்தை, மகள்களின் வங்கிக் கணக்குகளுக்கு செலுத்தியதை அறியாத பழனி, தனது நண்பரான ஆட்டோ ஓட்டுநர் துளசிதாஸுடன் சேர்ந்து பொன்னம்மாள் வீட்டிற்கு வந்து அவரை கொலை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. பீரோவில் பணம் இல்லாததால், பீரோவில் இருந்த 8 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தையும், பொன்னம்மாள் அணிந்திருந்த 4 பவுன் நகைகளையும் கொள்ளையடித்துவிட்டு இருவரும் தப்பிச் சென்றுள்ளனர். அவர்களிடம் இருந்து 1.27 லட்சம் ரூபாய் ரொக்கமும், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.