தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் ஒவ்வொரு 90 நிமிடங்களுக்கும் ஒரு பெண் வரதட்சணை கொடுமையால் உயிரிழக்கும் அவலநிலை தொடர்கிறது. இந்த துயரமான மரணங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் சற்று குறைந்திருந்தாலும், தினசரி 15க்கும் மேற்பட்ட பெண்கள் இந்த கொடூரத்தால் பாதிக்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டில் வரதட்சணை கொடுமையால் 7,634 பெண்கள் உயிரிழந்த நிலையில், 2024ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 5,737 ஆக குறைந்துள்ளது. இது சுமார் 1,900 மரணங்கள் குறைந்திருந்தாலும், இந்த குறைவு ஆறுதல் அளிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், ஒவ்வொரு 90 நிமிடங்களுக்கும் ஒரு பெண் உயிரிழப்பது என்பது நாட்டின் ஒட்டுமொத்த பெண்கள் நலன் குறித்த கவலையை எழுப்புகிறது.
குறிப்பாக, உத்தரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் வரதட்சணை மரணங்கள் அதிகமாக பதிவாகியுள்ளன. உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 2024ஆம் ஆண்டில் 2,038 மரணங்கள் பதிவாகியுள்ளன. இது நாட்டின் மொத்த வரதட்சணை மரணங்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமாகும். பீகாரில் 1,078 மரணங்களும், மத்தியப் பிரதேசத்தில் 450 மரணங்களும் பதிவாகியுள்ளன.
வரதட்சணை கொடுமையால் உயிரிழக்கும் பெண்களின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், இந்த கொடுமைக்கு எதிரான சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்றும், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். இதுபோன்ற மரணங்கள் முற்றிலும் தடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை இந்த அறிக்கை மீண்டும் ஒருமுறை சுட்டிக்காட்டுகிறது.