சென்னையில் உள்ள பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 10.81 லட்சம் ரூபாய் மோசடி செய்த மருத்துவமனை ஊழியரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட செவிலியர் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் அருகே உள்ள புட்லூர் பகுதியைச் சேர்ந்த ஜெயப்பிரியா (24) என்பவர், திருவள்ளூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கு, சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு, சென்னை பெரம்பூர் ரயில்வே மருத்துவமனை ஊழியரான ரோஹித் (29) என்பவரின் அறிமுகம் கிடைத்துள்ளது. இந்த அறிமுகத்தைப் பயன்படுத்தி, ரோஹித், ஜெயப்பிரியாவிடம் பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் செவிலியர் பணி வாங்கித் தருவதாகக் கூறியுள்ளார்.
இதற்காக, ஜெயப்பிரியாவிடம் இருந்து 2024 ஆம் ஆண்டு தொடக்கத்தில் 10.81 லட்சம் ரூபாயை ரோஹித் பெற்றுள்ளார். பின்னர், போலியான பணி ஆணையை ஜெயப்பிரியாவிடம் கொடுத்துள்ளார். பணி ஆணை போலியானது என்பதை அறிந்த ஜெயப்பிரியா, தான் கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்டுள்ளார். ஆனால், ரோஹித் பணத்தைத் திரும்பத் தராமல் ஏமாற்றி வந்துள்ளார்.
இது குறித்து ஜெயப்பிரியா அளித்த புகாரின் பேரில், ஆவடி மத்திய குற்றப்பிரிவின் வேலைவாய்ப்பு மோசடி பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தலைமறைவாக இருந்த ரோஹித்தை போலீஸார் நேற்று கைது செய்து, அவரிடம் இருந்து பணம் மற்றும் ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர். இந்த மோசடி தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.