மும்பையில் அதிர்ச்சி சம்பவம்! கணவனின் கொடூர செயலால் திருமணமான 48 நாட்களிலேயே இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையின் தானே பகுதியில் உள்ள அம்பர்நாத்தில், தனது வீட்டுக்குள் கேமராக்களைப் பொருத்தி மனைவியின் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்த கொடூர கணவனின் செயலைத் தாங்க முடியாமல் விஷாகா என்ற 26 வயது பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவர் நிதின் தில்கர், மனைவியின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட்டு, அவர் அக்கம் பக்கத்தினருடன் பேசினாலும் அடித்து துன்புறுத்தியுள்ளார்.
இந்த கொடூர சம்பவத்திற்கு கணவர் நிதின் தில்கர், அவரது தாயார் மற்றும் சகோதரர் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். நகை மற்றும் பணம் கேட்டு விஷாகாவை அவரது கணவர் வீட்டார் கொடுமைப்படுத்தியதாகவும், சந்தேகத்தின் பேரில் மனைவியை துன்புறுத்தியதால் அவர் இந்த விபரீத முடிவை எடுத்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஏப்ரல் 30 அன்று நிதின் தில்கர் மற்றும் விஷாகா திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு முன்பு வரை அனைத்தும் நன்றாக இருந்ததாகவும், ஆனால் திருமணம் முடிந்த உடனேயே கணவரின் குணம் மாறிவிட்டதாகவும் விஷாகாவின் குடும்பத்தினர் வேதனையுடன் தெரிவித்தனர்.