குமரி மாவட்டம் நாகர்கோவிலில், எம்.எஸ்.சி. பட்டதாரி பெண் ஒருவர், டைல்ஸ் வெட்டும் எந்திரத்தால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தற்கொலைக்கு தீராத தலைவலி காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவிலை அடுத்த சிவாநகரைச் சேர்ந்த பால்பாண்டி என்பவரின் மகள் காவியா (24). இவர் எம்.எஸ்.சி. பட்டம் பெற்றவர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில், நேற்று மாலை காவியா திடீரென மனமுடைந்து காணப்பட்டார். அப்போது, வீட்டில் இருந்த டைல்ஸ் அறுக்கும் எலக்ட்ரிக் எந்திரத்தை எடுத்து வந்து, அதை தன்னுடைய கழுத்தில் வைத்து இயக்கியுள்ளார். இதில், எந்திரம் அவருடைய கழுத்தை அறுத்தது.
காவியாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது, அவர் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், காவியா நீண்ட நாட்களாக தீராத தலைவலியால் அவதிப்பட்டு வந்ததும், இதனால் மனமுடைந்தே இந்த விபரீத முடிவை எடுத்ததும் தெரியவந்துள்ளது. இருப்பினும், வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டதாரி பெண் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.