சென்னை: ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக நடைபெறும் ஆட்டத்தை காண வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு அந்த அணி நிர்வாகம் திடீர் கட்டுப்பாடு ஒன்றை விதித்துள்ளது. அரசியல் கட்சி சார்ந்த எந்தவொரு கொடிகளையும், பேனர்களையும் மைதானத்திற்குள் கொண்டு வரக்கூடாது என அதிரடியாக உத்தரவிட்டுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள மாபெரும் மாற்றங்களுக்கு மத்தியில், சேப்பாக்கம் மைதானத்தில் இந்த திடீர் கெடுபிடி கொண்டு வரப்பட்டுள்ளது.
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இன்று (மே 10) நடைபெறும் மிக முக்கியமான லீக் ஆட்டத்தில் சென்னை மற்றும் லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. பிளே ஆப் வாய்ப்பை தக்கவைக்க இரு அணிகளுக்கும் வெற்றி கட்டாயம் என்பதால் இப்போட்டி மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில், ஆட்டத்தை காண வரும் ரசிகர்கள் அரசியல் கட்சிகள் அல்லது அரசியல் தலைவர்கள் சார்ந்த பேனர்கள், கொடிகள் அல்லது பதாகைகள் போன்றவற்றை மைதானத்திற்குள் கொண்டு வர வேண்டாம் என சிஎஸ்கே அணி நிர்வாகம் சமூக வலைதளங்களில் அதிகாரப்பூர்வ கோரிக்கை விடுத்துள்ளது.
“விளையாட்டின் உண்மையான உணர்வை எங்களுடன் இணைந்து கொண்டாடுங்கள். அரசியலை தவிர்த்துவிட்டு, மஞ்சள் படையுடன் கிரிக்கெட்டை முழுமையாக ரசிப்போம்” என அன்பான வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
சிஎஸ்கே அணியின் இந்த அதிரடி அறிவிப்புக்கு ஒரு மிக முக்கியமான அரசியல் காரணம் உள்ளது. தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய், தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்று (மே 10) அதிகாரப்பூர்வமாக பதவியேற்றார். இதனால் அவரது கட்சியினர் மற்றும் ரசிகர்கள் மைதானத்திற்குள் அரசியல் பேனர்களுடன் கொண்டாட்டங்களில் ஈடுபட அதிக வாய்ப்புள்ளது. ஆட்டத்தின் முழு கவனமும் கிரிக்கெட்டில் இருந்து அரசியலுக்கு மாறிவிடக் கூடாது என்பதற்காகவே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் சின்னமான ‘விசில்’ விவகாரம் சேப்பாக்கம் மைதானத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தாரக மந்திரமே ‘விசில் போடு’ என்பது தான். ஆனால், சமீபத்தில் நடந்த டி20 உலகக் கோப்பை போட்டிகளின் போது சேப்பாக்கம் மைதானத்திற்குள் ரசிகர்கள் விசில் கொண்டு செல்ல போலீசாரால் திடீர் தடை விதிக்கப்பட்டது. மைதானத்திற்கு வெளியே விசில்களை விற்கவும் தடை விதிக்கப்பட்டது. இது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
பின்னர் இது குறித்து விளக்கம் அளித்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், தாங்களோ அல்லது ஐசிசியோ இந்த தடையை விதிக்கவில்லை என்றும், இது முழுக்க முழுக்க உள்ளூர் போலீசாரின் நடவடிக்கை என்றும் கைவிரித்தது. விசிலுக்கே இவ்வளவு பெரிய சிக்கல் ஏற்பட்ட நிலையில், தற்போது அரசியல் கொடிகள் மற்றும் பேனர்களால் மைதானத்தில் எவ்வித குழப்பமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே சிஎஸ்கே அணி நிர்வாகம் முன்கூட்டியே இந்த உஷார் நடவடிக்கையை எடுத்துள்ளது.