தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பல்வேறு கல்லூரிகளில், கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்பு (பிவிஎஸ்சி – ஏ.ஹெச்) மற்றும் உணவு, பால்வளத் தொழில்நுட்ப பட்டப் படிப்புகளுக்கு (பி.டெக்) விண்ணப்பிக்க மாணவர்களுக்கு கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் பிவிஎஸ்சி – ஏ.ஹெச் படிப்பில் 660 இடங்கள் உள்ளன. மேலும், திருவள்ளூர் மாவட்டம் கோடுவெளியில் உள்ள உணவு, பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் உணவுத் தொழில்நுட்பம் மற்றும் பால்வளத் தொழில்நுட்ப பட்டப் படிப்புகளுக்கும், ஓசூர் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி, மேலாண்மைக் கல்லூரியில் கோழியின தொழில்நுட்பம் மற்றும் உணவு தொழில்நுட்ப பட்டப் படிப்புகளுக்கும், சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் உள்ள இணைப்புக் கல்லூரியில் உணவுத் தொழில்நுட்பம் மற்றும் பால்வளத் தொழில்நுட்ப பட்டப் படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
நடப்பு 2026-27-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை மே 25-ம் தேதி தொடங்கியது. பிவிஎஸ்சி – ஏ.ஹெச். படிப்புக்கு 10,678 பேரும், பி.டெக். படிப்புகளுக்கு 5,356 பேரும் என மொத்தம் 16,034 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். முதலில் ஜூன் 17-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்க காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
தற்போது, மாணவர்களின் வேண்டுகோளை ஏற்று, விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 23-ம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வெளிநாட்டினர், வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் அவர்களது வாரிசுகளுக்கு இந்த கால நீட்டிப்பு பொருந்தாது. அவர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி ஜூன் 17-ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த அனைத்து படிப்புகளுக்கும் பிளஸ்2 மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.