இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக நீச்சல் குளங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், தனது விளையாட்டு வாழ்க்கையைத் தொடர குடும்பத்துடன் துபாய்க்கு குடிபெயர்ந்த அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார் நடிகர் மாதவனின் மகன், நீச்சல் வீரர் வேதாந்த் மாதவன். 20 வயதான வேதாந்த், துபாயில் புதிய சூழலுக்குப் பழகியதும், அங்கு எதிர்கொண்ட சவால்களையும் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.
துபாய்க்கு இடம்பெயர்வது எந்தச் சிக்கலும் இல்லாமல் எளிதாக நடந்ததாக வேதாந்த் குறிப்பிட்டுள்ளார். சொத்துகளை மாற்றுவதிலும், நீச்சல் பயிற்சியைத் தொடர்வதிலும் எந்தத் தடையும் ஏற்படவில்லை என்றும், அங்கு ஏராளமான இந்தியர்கள் இருந்ததால் புதிய சூழலுக்குப் பழகுவது சற்று எளிதாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். இருப்பினும், பள்ளி வாழ்க்கை, நீச்சல் பயிற்சி மற்றும் சமூக வாழ்க்கையை சமநிலைப்படுத்துவது ஆரம்பத்தில் சவாலாக இருந்ததாகவும், இந்தியாவில் தனது முழு வாழ்க்கையையும் கழித்திருந்ததால் புதிய நாட்டின் சூழலுக்குப் பழகுவதற்கு சிறிது காலம் தேவைப்பட்டதாகவும் வேதாந்த் தெரிவித்துள்ளார்.
கொரோனா காலத்தில் துபாய்க்குச் சென்ற முடிவு தனது விளையாட்டு வாழ்க்கைக்கு ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்ததாக வேதாந்த் கூறியுள்ளார். இந்த முடிவின் காரணமாக டென்மார்க்கில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும், இந்தியாவில் உருவாக்கியிருந்த வாழ்க்கை, நண்பர்கள் மற்றும் பழக்கமான சூழலை விட்டு வெளியேற வேண்டியிருந்தாலும், தனது இலக்கை நோக்கி புதிய நாட்டில் புதிய வாழ்க்கையைத் தொடங்க முடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது வெற்றிப் பயணத்தில் பெற்றோரின் பங்களிப்பு குறித்துப் பேசிய வேதாந்த், 'எனது பெற்றோர் எப்போதும் உறுதுணையாக இருந்து வருகின்றனர். தங்கள் கனவுகளை நோக்கி பயணிக்கும் அனைவருக்கும் பெற்றோரின் முழுமையான ஆதரவு கிடைப்பதில்லை. அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலி. அவர்களுடைய ஆதரவு இல்லாமல் இன்று நான் இந்த நிலையை அடைந்திருக்க முடியாது. நீச்சல் என்பது தனிநபர் விளையாட்டாக இருந்தாலும், அதன் பின்னால் ஒரு முழு குழுவின் பங்களிப்பு இருக்கிறது. அந்த அணியில் பெற்றோர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. அவர்களின் ஆதரவு இல்லாமல் வெற்றியை நோக்கிய பயணம் எளிதாக அமையாது' என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.