ஹாலிவுட் இயக்குனர்களில் தனித்துவமான படைப்புகளுக்கு பெயர் பெற்றவர் கிறிஸ்டோபர் நோலன். 'தி டார்க் நைட்', 'இன்டர்ஸ்டெல்லார்', 'ஓப்பன்ஹெய்மர்' போன்ற பல வெற்றிப் படங்களை தந்த இவரது இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படம் 'தி ஒடிசி'. கிரேக்க புராண காவியமான ஹோமரின் 'இலியட்' கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இந்தப் படம், ஜூலை மாதம் திரைக்கு வரவுள்ளது.
இந்தப் படத்தில் 'ஹெலன்' கதாபாத்திரத்தில் நடிகை லூபிடா நியாங்கோ நடிப்பதற்கு சில ரசிகர்களிடையே சர்ச்சை எழுந்துள்ளது. கதையில் பேரழகியாக வர்ணிக்கப்படும் கதாபாத்திரத்தில் கருப்பின நடிகையை நடிக்க வைத்தது ஏன் என்ற கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. ஹாலிவுட்டில் சமீப காலமாக, கதைக்கு தேவையில்லாத 'வோக்' கலாசாரம் திணிக்கப்படுவதாகவும், சமூக நீதி, பன்முகத்தன்மை போன்ற கருத்துக்கள் வலிந்து திணிக்கப்படுவதாகவும் ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த சர்ச்சைக்கு பதிலளித்துள்ள இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன், 'இலியட்' காவியம் பெரும்பாலும் வாய்மொழியாகவே பரவி வந்துள்ளது. அந்த வாய்மொழி மரபை பிரதிபலிக்கும் விதமாகவே படத்தில் சில கருப்பின நடிகர்களை நடிக்க வைத்துள்ளதாக விளக்கமளித்துள்ளார். ரசிகர்களின் சர்ச்சையை ஏற்படுத்துவது தனது நோக்கமல்ல என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
'ஓப்பன்ஹெய்மர்' திரைப்படம் 7 ஆஸ்கார் விருதுகளை வென்ற நிலையில், நோலனின் அடுத்த படைப்பான 'தி ஒடிசி' மீதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஐமேக்ஸ் கேமரா பயன்பாடு, கிராபிக்ஸ் குறைப்பு போன்ற இவரது வழக்கமான பாணியில் இந்தப் படம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.