பிரபல பாலிவுட் நடிகை மவுனி ராய், சின்னத்திரை தொடர்கள் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். குறிப்பாக, 'நாகினி' தொடரில் நாகினியாக நடித்ததன் மூலம் பெரும் புகழ் பெற்றார். இவர், துபாய் தொழிலதிபர் சுராஜ் நம்பியாரைக் காதலித்து கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
சமீபத்தில், மவுனி ராய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து சுராஜ் நம்பியாரின் புகைப்படங்களை நீக்கியது, இருவரும் பிரிந்துவிட்டதாக வதந்திகள் பரவக் காரணமாக அமைந்தது. இந்த நிலையில், இருவரும் பிரிந்து செல்வதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய கற்பனையான கதைகளையும், அப்பட்டமான பொய்களையும் பரப்புவதன் மூலம் தனிப்பட்ட வாழ்க்கையைப் பரபரப்பாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர். ஆழமான சிந்தனைக்குப் பிறகு, பரஸ்பர மரியாதை மற்றும் புரிதலுடன் தனித்தனி பாதைகளில் முன்னோக்கிச் செல்ல முடிவெடுத்துள்ளதாகக் கூறியுள்ளனர்.
வரும் காலங்களிலும் தங்கள் நட்பைப் போற்ற முயற்சிப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர். மேலும், ரசிகர்களின் புரிதலுக்கும், தங்களது தனிப்பட்ட சுதந்திரத்திற்கு அளிக்கும் மரியாதைக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.