ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா, திரிஷா நடிப்பில் உருவான 'கருப்பு' திரைப்படத்தின் வெளியீடு மீண்டும் ஒருமுறை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு முடிந்து பல மாதங்கள் ஆகியும், பல்வேறு காரணங்களால் இப்படம் ரிலீஸ் ஆகாமல் தாமதமாகி வந்தது. இறுதியாக, மே 14 அன்று வெளியாகும் என படக்குழு கடந்த மாதம் அறிவித்திருந்தது. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வந்தன. ஆனால், வெளியீட்டிற்கு முந்தைய நாள், மதுரை உள்ளிட்ட சில மாவட்டங்களில் முன்பதிவு நிறுத்தப்பட்டது. திட்டமிட்டபடி படம் வெளியாகும் என படக்குழு உறுதி அளித்தபோதும், நேற்று உலகம் முழுவதும் 'கருப்பு' திரைப்படம் வெளியாகவில்லை.
காலை 9 மணி சிறப்பு காட்சி முதல் அடுத்தடுத்த காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. இதனால், சூர்யாவின் படத்தை உற்சாகத்துடன் கொண்டாட கருப்பு சட்டை அணிந்து தியேட்டர்களுக்கு வந்த ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர். ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களும் ஏமாற்றம் அடைந்தனர். படத்தின் வெளியீடு குறித்த இந்த திடீர் அறிவிப்பால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டது.
படத்தின் ரிலீஸ் தாமதத்தால் மனமுடைந்த இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி, கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்தார். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. படத்தின் நிதி சிக்கல்களை தீர்ப்பதற்கான முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
தற்போது, நடிகர் சூர்யாவின் தரப்பிலிருந்தும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், இன்று 'கருப்பு' திரைப்படம் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இறுதி கட்ட பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிந்தால், விரைவில் படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.