நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இணைந்து உருவாக்கியுள்ள 'கருப்பு' திரைப்படம், பலமுறை வெளியீட்டுத் தேதியை மாற்றியமைத்த பின்னர், நேற்று (மே 15) உலகெங்கிலும் வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
படத்தின் வெளியீட்டைத் தொடர்ந்து, திரைத்துறையைச் சேர்ந்த பலரும் படக்குழுவினரைப் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில், பிரபல தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, 'கருப்பு' திரைப்படத்தைப் பார்த்துவிட்டு தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
தனது பதிவில், 'கருப்பு திரைப்படத்தைப் பார்த்த பிறகு நான் மிகவும் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் உணர்கிறேன். சூர்யா சார், எனக்கு மிகவும் பிடித்த திரிஷா, சாய் அபயங்கர் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினரும் இந்த கோடைக்காலத்தில் ஒரு மாபெரும் வெற்றிப் படத்தை வழங்கியிருப்பதை கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ஆர்.ஜே. பாலாஜி நீங்கள் இவ்வாறு கொண்டாடுவதை பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பிரபு எஸ்.ஆர். வாழ்த்துகள்!' என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கோடை காலத்தில் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் ஒரு சிறந்த படைப்பை 'கருப்பு' திரைப்படம் வழங்கியிருப்பதாக அர்ச்சனா கல்பாத்தி பாராட்டியுள்ளார். மேலும், இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜியின் உழைப்பையும், நடிகர் சூர்யா மற்றும் படக்குழுவினரின் பங்களிப்பையும் அவர் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.