இயக்குநர் சுசி கணேசன் தனது அடுத்த படமான 'ஒரண்ட' படத்தின் தலைப்பால் உலகளவில் கவனம் ஈர்த்துள்ளார். படத்தின் நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள், முதல் பார்வை, டீசர் வெளியீடு போன்ற எந்த விவரங்களையும் வெளியிடாமல், 'ஒரண்ட' என்ற தலைப்பை மட்டுமே பயன்படுத்தி, உலகெங்கிலும் உள்ள தமிழர்களிடையே பெரும் விவாதப் பொருளாக மாற்றியுள்ளார்.
கதை அல்லது கதாபாத்திரங்கள் பற்றிய எந்தத் தகவலும் பகிரப்படாத நிலையில், அன்றாடப் பேச்சுவழக்கில் பயன்படுத்தப்படும் ஒரு வட்டாரச் சொல்லை திரைப்படத் தலைப்பாக வைத்திருப்பது ரசிகர்களிடையே மிகப்பெரிய ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் தூண்டியுள்ளது. சமூக வலைதளங்கள் முதல் பொதுமக்களின் உரையாடல்கள் வரை, 'ஒரண்ட' என்ற தலைப்பே தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த வித்தியாசமான விளம்பர உத்தி பெரும் வெற்றியடைந்துள்ளதாக பலரும் பாராட்டி வருகின்றனர்.
ஒரு திரைப்படத்தின் முதல் பேசுபொருள் அதன் தலைப்பாகவே இருக்க வேண்டும் என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்ட இயக்குநர் சுசி கணேசன், தனது திறமையை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். தற்போது படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏறக்குறைய 85% படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், மீதமுள்ள பணிகள் விரைவில் முடிவடையவுள்ளன. அதன் பிறகு படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தின் தலைப்பின் மூலமே ஒரு திரைப்படத்தைப் பற்றிப் பேச வைப்பது சுசி கணேசனுக்கு இது முதல் முறையல்ல. அவரது ஒவ்வொரு திரைப்படத் தலைப்பும் தனித்துவமான அடையாளத்தைக் கொண்டுள்ளன. படம் வெளியாகும் முன்பே, அதன் தலைப்பு ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து, பெரும் எதிர்பார்ப்பை உருவாக்குவது அவரது தனிச்சிறப்பாகும்.
முன்னதாக, 'விரும்புகிறேன்' திரைப்படத்தின் மூலம் பழமையான தமிழ்ச்சொல்லான 'விரும்புகிறேன்' என்பதை மறக்க முடியாத திரைப்படத் தலைப்பாக மாற்றினார். அந்தப் படத்தின் விளம்பரத்திற்காக அண்ணா சாலையில் தீயணைப்பு குழாய்களால் பிணைக்கப்பட்ட நிலையில் நாயகன் – நாயகி இடம்பெற்ற பிரம்மாண்ட விளம்பரம் அன்றைய காலகட்டத்தில் பெரும் பேசுபொருளானது. '5 ஸ்டார்' என்ற தலைப்பின் மூலம் ஒரு சாதாரண சொல்லை என்றும் மறக்க முடியாத நட்பின் அடையாளமாக மாற்றினார்.
'திருட்டுப் பயலே' திரைப்படத்தின் தலைப்பே அந்தப் படத்தின் மாபெரும் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று என்று இயக்குநர் கே. பாக்யராஜ் பொதுவெளியில் பாராட்டியிருந்தார். 'கந்தசாமி' திரைப்படத்தின் மூலம் ஒரு பொதுஜனப் பெயரையே பிரம்மாண்டமான சூப்பர் ஹீரோவின் அடையாளமாக உயர்த்திய சுசி கணேசன், அந்தப் படத்தின் துவக்க விழாவிலேயே கையடக்க டிஜிட்டல் திரையில் டிரெயிலரை வெளியிட்டு, அக்காலத்திலேயே புதுமையான விளம்பர உத்தியை அறிமுகப்படுத்தியிருந்தார்.
திரைப்படத்தின் தலைப்பு என்பது வெறும் பெயர் அல்ல; அது ரசிகர்களுக்கும் கதைக்கும் இடையிலான முதல் உணர்வுப்பூர்வமான இணைப்பு என்பதை சுசி கணேசன் காலம் தோறும் நிரூபித்து வருகிறார். இப்போது, 'ஒரண்ட' என்ற தலைப்பின் மூலமும் அதையே மீண்டும் ஒருமுறை நிகழ்த்தியிருக்கிறார். முதல் பார்வை, டீசர், டிரெயிலர் வெளியாகும் முன்பே, 'ஒரண்ட' இன்று தமிழகம் முழுவதும் பேசப்படும் பெயராக மாறியுள்ளது.
