வார விடுமுறை நாட்களை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் 945 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய முக்கிய நகரங்களுக்கு 19 ஆம் தேதி 350 பேருந்துகளும், 20 ஆம் தேதி 365 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு போன்ற இடங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதில், 19 ஆம் தேதி 55 பேருந்துகளும், 20 ஆம் தேதி 55 பேருந்துகளும் இயக்கப்படும். பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கு 100 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதாவரத்திலிருந்து 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் 2 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
ஞாயிற்றுக்கிழமை அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக, பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. இந்த சிறப்பு பேருந்து சேவைகள், வார விடுமுறையை சொந்த ஊரில் கொண்டாட விரும்புவோருக்கும், பணி நிமித்தமாக பயணம் செய்வோருக்கும் பெரும் உதவியாக இருக்கும்.
இந்த சிறப்பு பேருந்து இயக்கத்தின் மூலம், பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும் முக்கிய வழித்தடங்களில் போக்குவரத்து நெரிசல் குறைவதோடு, பயணிகளும் சிரமமின்றி தங்கள் இலக்குகளை அடைய முடியும். வார இறுதி நாட்களில் பயணிகளின் வசதிக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.