இந்திய ரயில்வே துறையின் முக்கிய சேவையான ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் பயனர்கள் சந்திக்கும் சிரமங்களுக்கு விரைவில் தீர்வு காணப்பட உள்ளது. ஜூலை 15 ஆம் தேதி முதல், மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் கூடிய புதிய அதிவேக ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் பயன்பாட்டுக்கு வரும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.
ஜெய்ப்பூரில் உள்ள மாளவியா தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் நடைபெற்ற மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, ஒரு மாணவர் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் உள்ள சிக்கல்கள் குறித்து கேள்வி எழுப்பினார். குறிப்பாக, பாதுகாப்பு சரிபார்ப்பு குறியீடு (கேப்ட்சா), தட்கால் முன்பதிவின் போது ஏற்படும் இணையதள முடக்கம், மற்றும் ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல் (ஓ.டி.பி.) கிடைப்பதில் தாமதம் போன்ற பிரச்சனைகளால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில், ஜூலை 15 முதல் புதிய மற்றும் அதிவேக ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் அறிமுகப்படுத்தப்படும் என்று உறுதியளித்தார். மேலும், ரயில் பயணத்தின் போது உணவு விநியோகம் செய்யும் 'இ-கேட்டரிங்' சேவையிலும் சில அங்கீகரிக்கப்படாத நிறுவனங்கள் சுகாதாரமற்ற உணவுகளை விநியோகிப்பதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, அங்கீகரிக்கப்படாத 14 'இ-கேட்டரிங்' இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். பயணிகள் ஐ.ஆர்.சி.டி.சி.யின் அதிகாரப்பூர்வ 'புட் ஆன் ட்ராக்' செயலி அல்லது அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் மூலம் மட்டுமே உணவு முன்பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.