தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தற்போதைய தவெக ஆட்சி, 2011-க்கு முந்தைய திமுகவின் கொடூர ஆட்சியின் தொடர்ச்சியாக செயல்படுவதாக கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தவெக ஆட்சி அமைந்த 15 நாட்களுக்குள்ளேயே தமிழகத்தில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சிறுவர் சிறுமியர் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள், ஆளுங்கட்சியினரின் மாமூல் வேட்டைகள், பெட்ரோல் குண்டு வீச்சுகள் போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும், தற்போது அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டுகளால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாகவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். முதல்வர் ஜோசப் விஜய், மக்களின் துன்பங்களைக் கண்டுகொள்ளாமல் 'ரீல்ஸ்' மோகத்தில் மூழ்கியிருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆட்சிக்கு வந்தவுடன் சட்டம் ஒழுங்கு, சுகாதாரம், பாதுகாப்பு, மக்களின் அத்தியாவசியத் தேவைகள் என அனைத்திலும் தோல்வியடைந்த தவெக அரசு, முதல்வர் ஜோசப் விஜய் கமுக்கமாக கோட்டைக்குள் ஒளிந்துகொள்வதுதான் அவர் முன்மொழிந்த 'மாற்று' அரசியலா என கேள்வி எழுப்பியுள்ளார். அடிப்படைத் தேவையான மின்சாரம் தடையின்றி கிடைக்க போராடும் மக்களை அலட்சியப்படுத்துவதுதான் தவெகவின் 'அனைவருக்குமான ஆட்சி'யா என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
'திமுக எனும் தீயசக்தியை அழிக்க வந்த தூயசக்தி' என்று கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த தவெக அரசு, தற்போது திமுகவின் 'அல்லக்கை' போன்று செயல்படுவதாகவும், இதனால் மக்களிடம் மெல்ல மெல்ல அம்பலப்பட்டு வருவதாகவும் நயினார் நாகேந்திரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.