திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் சோகம்! உறவினர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீடு திரும்பியபோது, மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதியதில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மீஞ்சூர் கக்கன்ஜி காலனியைச் சேர்ந்த கொத்தனார் சதீஷ் (34), அவரது மனைவி ரஞ்சனி (28), மகன்கள் சைலேஷ் (6) மற்றும் 9 மாத குழந்தை ஹரிஹரன், உறவுப்பெண் கீர்த்தனா (16) ஆகியோர் செங்குன்றம் அருகே அலமாதியில் நடந்த உறவினர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு, நள்ளிரவில் ஒரே மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, சோழவரம் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் பயங்கரமாக மோதியது.
இந்த கோர விபத்தில், மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற சதீஷ் மற்றும் அவரது மூத்த மகன் சைலேஷ் ஆகியோர் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சதீஷின் மனைவி ரஞ்சனி, குழந்தைகளான ஹரிஹரன் மற்றும் கீர்த்தனா ஆகியோர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்த தகவல் அறிந்ததும் செங்குன்றம் போக்குவரத்து காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயமடைந்த மூவரையும் மீட்டு சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த தந்தை-மகனின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த துயரச் சம்பவம் தொடர்பாக செங்குன்றம் போக்குவரத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தில் இருவர் பலியான இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.