உலகளவில் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் அதிநவீன செயற்கை நுண்ணறிவு தளமான சாட்ஜிபிடி (ChatGPT)-யில், சத்குருவின் 'மிராக்கிள் ஆஃப் மைண்ட்' (Miracle of Mind) தியான செயலி தற்போது இடம்பெற்றுள்ளது. இதன் மூலம், சாட்ஜிபிடி-யின் 90 கோடிக்கும் அதிகமான பயனர்கள் இனி எளிதாக தியானப் பயிற்சிகள் மற்றும் மன நலத்தை மேம்படுத்தும் கருவிகளைப் பெற முடியும். சாட்ஜிபிடி தளத்தில் இணையும் முதல் இந்தியத் தயாரிப்பு தியான செயலி என்ற பெருமையையும் இது பெற்றுள்ளது.
'உங்கள் மனம் ஒரு விழிப்புணர்வு செயல்முறையாக மாறினால், அதுவே இந்த பிரபஞ்சத்தின் மிகப்பெரிய அற்புதமாகும்' என்று சத்குரு கூறியுள்ளார். இந்தச் செயலியின் அடிப்படை நோக்கத்தை அவர் இவ்வாறு விளக்கியுள்ளார். சாட்ஜிபிடி தளத்தில் உள்ள ஜிபிடி ஆப் ஸ்டோரில் (GPT App Store) 'Miracle' எனத் தேடி, 'மிராக்கிள் ஆஃப் மைண்ட்' செயலியை இணைத்துக்கொள்ளலாம். பின்னர், அரட்டைப் பகுதியில் (Chat) 'Meditate with Miracle' என டைப் செய்வதன் மூலம் தியானத்தைத் தொடங்கலாம்.
இந்த 'மிராக்கிள் ஆஃப் மைண்ட்' செயலி, பயனர்களுடன் உரையாடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், தினசரி மனநிலையைக் கண்காணிக்கும் 'லைஃப் ஹாப்ஸ்காட்ச்' (Life Hopscotch) வசதி உள்ளது. மேலும், தியானம் செய்வதன் மூலம் காயின்கள் மற்றும் ஷீல்டுகளைப் பெறும் விளையாட்டு அம்சங்களும் இதில் அடங்கும். இதன் மூலம் ஈட்டப்படும் காயின்களைக் கொண்டு, முன்னணி ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு நிறுவனங்களின் சேவைகளைப் பெற முடியும்.
இது குறித்து ஈஷா அறக்கட்டளையின் டிஜிட்டல் தயாரிப்புகளின் தலைவர் சினேகா மகபு பேசுகையில், 'ஏற்கனவே பலர் மன ஆறுதலுக்காக சாட்ஜிபிடி-ஐ பயன்படுத்தி வருகின்றனர். இந்தச் சூழலில், சத்குருவின் தியான செயலி இணைக்கப்பட்டது மக்களின் வாழ்க்கையில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தும். பதற்றம், மன அழுத்தம், தூக்கமின்மை போன்ற சவால்களைச் சமாளிக்க, செயற்கை நுண்ணறிவு உதவியுடன் சத்குருவின் உரைகள் மற்றும் பதில்களைப் பெறும் வசதியும் இதில் உள்ளது' என்றார். கடந்த 2025-ஆம் ஆண்டு மஹாசிவராத்திரி அன்று அறிமுகப்படுத்தப்பட்ட இந்தச் செயலி, 15 மணி நேரத்தில் 10 லட்சம் பதிவிறக்கங்களைக் கடந்து சாதனை படைத்தது. இது தமிழ், ஆங்கிலம், இந்தி, ரஷ்யன், தெலுங்கு, ஸ்பானிஷ் என 6 மொழிகளில் கிடைக்கிறது.