திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் அமைந்துள்ள ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில், உலக மக்களின் நலன் வேண்டி வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு மகா பிரத்யங்கிரா தேவி யாகபூஜை நடைபெற்றது.
இந்த யாகத்தை ஆதி பரஞ்சோதி சகலோக சபை நிர்வாகி திருவேங்கட ஜோதி பட்டாச்சாரியார் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். இதனையொட்டி, பிரத்யங்கிரா தேவி அம்மன் மற்றும் நரசிங்க பெருமாளுக்கு கண்கவர் மலர் அலங்காரம் செய்யப்பட்டது. வேத மந்திரங்கள் முழங்க, யாககுண்டத்தில் ஏராளமான மிளகாய் வற்றல்கள் கொட்டப்பட்டு யாக வேள்வி பூஜை வெகு விமரிசையாக நடத்தப்பட்டது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் இந்த சிறப்பு யாகத்தில் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். வெளிநாட்டு பக்தர்கள் இணையதளம் வழியாக பூஜையில் பங்கேற்று தங்கள் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர். பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை காகிதத்தில் எழுதி யாககுண்டத்தில் போட்டு மனமுருக வேண்டினர்.
இந்த யாக பூஜையின் மூலம் வியாபாரம் செழிக்கும், செல்வம் பெருகும், குடும்பத்தில் அமைதி நிலவும், திருமணம் கைகூடும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், முன்னோர்களின் பாவங்கள் தீரும் என நம்பப்படுகிறது. யாக பூஜைக்கு முன்பாக, கோவிலில் உள்ள கோசாலையில் வளர்க்கப்படும் சுமார் 100க்கும் மேற்பட்ட நாட்டு மாடுகளுக்கு அகத்திக்கீரை வழங்கி அமாவாசை கோபூஜையும் நடைபெற்றது.