தமிழகத்தில் உள்ள அனைத்து இந்து சமய அறநிலையத்துறை கோயில்களும் இனி எனது நேரடி கண்காணிப்பில் இருக்கும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எஸ். ரமேஷ் தெரிவித்துள்ளார். திருச்சி அருகே பெரும்பிடுகு முத்தரையர் சதயவிழாவில் பங்கேற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'மைக்ரோ மேனேஜ்மென்ட்' முறையை அமல்படுத்தி கோயில்களின் நிர்வாகத்தை மேம்படுத்த உள்ளதாக கூறினார்.
'மதச்சார்பற்ற சமூகநீதியே எங்கள் கொள்கை. சாதி, பணம், இனம், மொழி, பாலினம் என எந்த பாகுபாடும் இன்றி அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்குவதே எங்கள் தலைவரின் வழிகாட்டுதல். தந்தை பெரியார், அம்பேத்கர் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு, மக்களுக்கான சேவையை மனதார செய்ய வருபவர்களுக்கே வாய்ப்பு வழங்கப்படுகிறது. எங்கள் தலைவர் விஜய்க்கு மக்கள் அளிக்கும் ஆதரவு, அவரை திரையில் பார்க்கும் போது எந்தவித பிரிவினையும் இன்றி இருப்பது போலத்தான், எங்களை போன்றவர்களுக்கும் அமைகிறது. மக்களுக்காக சேவை செய்ய வந்துள்ள எங்கள் எண்ணத்தை மட்டுமே பார்க்க வேண்டும்' என அமைச்சர் தெரிவித்தார்.
கோயிலுக்கு வரும் பக்தர்கள் மன அமைதியுடன் சாமி தரிசனம் செய்து செல்ல வேண்டும். கூட்ட நெரிசல் மற்றும் நீண்ட காத்திருப்பு நேரத்தை தவிர்க்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கோயில் நிலங்கள் மற்றும் சொத்துக்கள் ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்கப்பட்டு, மக்களுக்கு பயனளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். இந்து சமய அறநிலையத்துறையில் கீழ்மட்ட ஊழியர்கள் வரை யாரும் ஊழலில் ஈடுபட அனுமதிக்கப்பட மாட்டார்கள். 'மைக்ரோ மேனேஜ்மென்ட்' மூலம் அனைத்து கோயில்களும் என் நேரடி பார்வையில் இருக்கும்.
திருக்கோயில்களில் இதுவரை நடந்த முறைகேடுகள் சரிசெய்யப்பட்டு, இந்து சமய அறநிலையத்துறை ஒரு சிறந்த துறையாக செயல்படும். ஸ்ரீரங்கம், திருவானைக்கோயில் பகுதிகளில் உள்ள அடிமனை பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்ய மாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டம் நடைபெறவுள்ளது. மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கோயில்களில் மேம்படுத்தப்படும். சற்று கால அவகாசம் கொடுங்கள், அனைத்தும் நிச்சயம் செய்யப்படும்' என அமைச்சர் எஸ். ரமேஷ் உறுதியளித்தார்.