தமிழகத்தில் அன்றாடம் நடக்கும் கொலை சம்பவங்களால் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு விஷயத்தில் திமுக அரசு போல் தவெக அரசும் தோல்வியடையக் கூடாது என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே பகுதிநேர கானா பாடல் தொழிலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டது, தூத்துக்குடி அருகே மது அருந்தும் தகராறில் இளைஞர் கொலை, கோவில்பட்டி பேருந்து நிலையம் அருகே இளைஞர் கொலை, சேலம் அருகே மதுபோதையில் சக மாணவர்களால் மாணவர் அடித்துக் கொலை என புதிய அரசு பொறுப்பேற்ற சில நாட்களிலேயே கொலைகளின் எண்ணிக்கை அதிகரிப்பது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த திமுக ஆட்சியின் போது காவல்துறையின் செயல்பாடுகள் முடக்கப்பட்டதே சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு முக்கிய காரணம் என கருதப்பட்டது. தற்போது தவெக ஆட்சிக்கு வந்த பிறகும் அதே நிலை தொடர்வது பொதுமக்களிடையே சந்தேகத்தை எழுப்பியுள்ளது. எனவே, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கை உறுதி செய்வது அரசின் முதன்மையான கடமை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என தவெக அரசையும் அதன் முதலமைச்சரையும் வலியுறுத்துகிறேன்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள டி.டி.வி. தினகரன், "பொதுமக்களின் உயிர் மற்றும் உடமைகளை பாதுகாப்பதில் புதிய அரசு கவனம் செலுத்த வேண்டும். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.