புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொலை சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. சட்டம் ஒழுங்கு நிலைமை கேள்விக்குறியாகியுள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் திமுகவைப் போலவே தவெகவும் தோல்வியடையக் கூடாது என அவர் கடுமையாக எச்சரித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே கல்லூரி மாணவர்கள் கொலை, தூத்துக்குடியில் இளைஞர் கொலை, கோவில்பட்டி பேருந்து நிலையம் அருகே இளைஞர் கொலை, சேலம் அருகே மாணவர் கொலை என தொடர்ச்சியாக நடக்கும் குற்ற சம்பவங்கள், புதிய அரசு குறித்த மக்களின் நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்குகின்றன. தினசரி நடக்கும் கொலைகளின் எண்ணிக்கை, அரசாங்கத்தின் செயல்பாடுகள் மீது சந்தேகத்தை எழுப்புகிறது.
கடந்த திமுக ஆட்சியின் போது காவல்துறை சுதந்திரமாக செயல்பட முடியாததால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்ததாக கூறப்பட்டது. ஆனால், தவெக ஆட்சிக்கு வந்த பிறகும் நிலைமை மாறாமல் இருப்பது கவலையளிப்பதாக தினகரன் குறிப்பிட்டுள்ளார். இது, காவல்துறையின் கைகள் இப்போதும் கட்டப்பட்டுள்ளதா என்ற சந்தேகத்தை பொதுமக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
எனவே, தமிழக அரசு உடனடியாக குற்றவாளிகளை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும், மக்களின் உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாத்து, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதே அரசின் தலையாய கடமை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.