மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் பின்னணி குறித்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. குறிப்பாக, வினாத்தாளை கசியவிட்டதாகக் கூறப்படும் ஜெய்ப்பூரைச் சேர்ந்த பிவால் குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர், 2025 நீட் தேர்வில் வெற்றி பெற்று அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது.
கடந்த மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) தேர்வு ரத்து செய்து மறுதேர்வு அறிவித்தது. இந்த மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபர்கள் மீது மத்திய அரசு உத்தரவின் பேரில் சிபிஐ தீவிர விசாரணை நடத்தி வருகிறது. விசாரணையின் ஒரு பகுதியாக, ராஜஸ்தானின் ஜம்வா ராம் கர்கைச் சேர்ந்த சகோதரர்களான மங்கிலால் மற்றும் தினேஷ் பிவால் ஆகியோர், குருஹ்ராம் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரிடம் இருந்து சுமார் ரூ.30 லட்சத்திற்கு வினாத்தாளை வாங்கியதாகத் தெரியவந்துள்ளது. இந்த வினாத்தாளை தங்கள் பிள்ளைகளுக்கும், மற்றவர்களுக்கும் விற்றுள்ளனர்.
இந்த வினாத்தாள் கசிவு மோசடியின் மையமாக ஜெய்ப்பூருக்கு அருகிலுள்ள சிகார் பகுதி மாறியுள்ளது. இங்குள்ள எம்.பி.பி.எஸ் ஆலோசனை ஏஜென்ட் ராகேஷ் குமார் மண்டவாரியா, வினாத்தாளை வாங்கி, கேரளாவில் படிக்கும் மாணவர்களுக்கு விற்றுள்ளார். அந்த மாணவர்கள் தங்கள் பெற்றோர்கள் மூலம் மற்ற மாணவர்களுக்கும் வினாத்தாளைப் பகிர்ந்துள்ளனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக குருஹ்ராம் மருத்துவர் கருதப்படுகிறார். மேலும், கைது செய்யப்பட்ட தினேஷ் பிவாலுக்கு ஒரு அரசியல் கட்சியுடன் தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 2025 ஆம் ஆண்டு நீட் தேர்வில், இந்த வினாத்தாள் கசிவு மோசடியில் கைதான மங்கிலால் மற்றும் தினேஷ் பிவால் குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் வெற்றி பெற்று அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளது தெரியவந்துள்ளது. குறிப்பாக, மங்கிலாலின் மகன் விகாஸ் 85.11% மதிப்பெண் பெற்று சவாய் மாதோப்பூர் மருத்துவக் கல்லூரியிலும், மகள் பிரகதி 89.08% மதிப்பெண் பெற்று டவுசா மருத்துவக் கல்லூரியிலும் சேர்ந்துள்ளனர். இதேபோல், தினேஷ் பிவாலின் மகள் கஞ்சன், வாரணாசி அரசு மருத்துவக் கல்லூரியிலும், கன்ஷியாமின் மகள் சானியா மும்பை அரசு மருத்துவக் கல்லூரியிலும், பாலக் ஜெய்ப்பூர் அரசு மருத்துவக் கல்லூரியிலும் சேர்ந்துள்ளனர். இவர்கள் அனைவரும் முந்தைய தேர்வுகளில் குறைந்த மதிப்பெண்களைப் பெற்றிருந்த நிலையில், 2025 தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்று அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம்பிடித்துள்ளனர். இது, வினாத்தாள் கசிவு மூலம் இவர்கள் தேர்ச்சி பெற்றார்களா என்ற சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
