மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள திருநாங்கூர் மதங்காஸ்ரமத்தில், மதங்கரிஷி தவம் செய்தபோது பார்வதிதேவி பெண்ணாக அவதரித்து சிவபெருமானை திருமணம் செய்து, ரிஷிக்கு திருமணக்கோலத்தில் காட்சி கொடுத்த ஐதீகத்தை நினைவு கூறும் வகையில், ஆண்டுதோறும் வைகாசி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் 12 கோவில்களின் சிவபெருமான்களும் அம்பாள்களும் ரிஷப வாகனங்களில் எழுந்தருளி திருக்கல்யாண கோலத்தில் வீதியுலா வரும் விழா வெகுவிமரிசையாக நடைபெறும்.
இந்த ஆண்டின் திருக்கல்யாண உற்சவம் மற்றும் சுவாமி வீதியுலா நிகழ்ச்சி இன்று வெகுச்சிறப்பாக நடைபெற்றது. இதற்காக, திருநாங்கூர் ஸ்ரீ அஞ்சனாக்ஷி சமேத ஸ்ரீ மதங்கீஸ்வர சுவாமி, திருக்காட்டுபள்ளி ஸ்ரீ அகிலாண்டேசுவரி சமேத ஸ்ரீ ஆரண்யேசுவரசுவாமி, திருயோகீசுவரம் ஸ்ரீ யோகாம்பிகை சமேத ஸ்ரீ யோகநாதசுவாமி, திருசொர்ணபுரம் ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ சொர்ணபுரீஸ்வரசுவாமி, திருநாங்கூர் ஸ்ரீ சந்திராசு அம்பாள் சமேத ஸ்ரீ அமிர்தபுரீசுவர சுவாமி, செம்பதனிருப்பு ஸ்ரீ நற்றுணைநாயகி சமேத ஸ்ரீநாகநாத சுவாமி, திருநாங்கூர் ஸ்ரீ நம்பிரியான் சமேத ஸ்ரீ நம்புவார்கன்ய சுவாமி, திருநாங்கூர் ஸ்ரீ காமாட்சி சமேத ஸ்ரீ கைலாசநாத சுவாமி, திருமேனிக்கூடம் ஸ்ரீ சௌந்தரநாயகி சமேத ஸ்ரீ சுந்தரேசுவர சுவாமி, பெருந்தோட்டம் ஸ்ரீ அதிதுல்ய குஜாம்பிகை சமேத ஸ்ரீ ஐராவதேசுவர சுவாமி, அன்னப்பன்பேட்டை ஸ்ரீ சுந்தரநாயகி சமேத ஸ்ரீ கலக்காமேசுவர சுவாமி, நயினிபுரம் ஸ்ரீ நளினாம்பிகை சமேத நயனவரதேசுவ சுவாமி ஆகிய 12 உற்சவமூர்த்திகள் திருநாங்கூர் கீழவீதியில் உள்ள மதங்காஸ்ரமம் எனும் மதங்கீசுவரர் கோவிலில் எழுந்தருளினர்.
சிறப்பு வழிபாடுகளுக்குப் பிறகு, 12 சுவாமிகளும் அம்பாள்களும் ரிஷப வாகனங்களில் எழுந்தருளி, சீர்வரிசை ஊர்வலம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திருமணச் சடங்குகள் செய்யப்பட்டு, 12 சிவபெருமான்களும் அம்பாள்களும் ஒரே நேரத்தில் திருக்கல்யாண உற்சவத்தில் காட்சியளித்தனர். பின்னர், மதங்க ரிஷிக்கு திருமணக் கோலத்தில் அருள்பாலித்தனர்.
இறுதியாக, வேதபாராயணம், திருமுறைப் பாராயணம், கைலாய வாத்தியங்கள், பஞ்ச வாத்தியங்கள் முழங்க, 12 சிவபெருமான்கள் அம்பாள்களுடன் திருவீதியுலா செல்லும் நிகழ்வு நடைபெற்றது. இதில் கோவில் செயல் அலுவலர்கள் முருகன், கணேஷ், ஆய்வாளர்கள் பத்ரிநாதன், முருகன், நாடி. மாமல்லன், கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.