சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2026 போட்டி மே 18 அன்று சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த முக்கியமான போட்டியை காண எம்.எஸ். தோனி மைதானத்திற்கு வருவார் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 44 வயதான தோனி, இந்த சீசனில் பயிற்சி கால காயத்தால் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர் எந்தப் போட்டிக்கும் இதுவரை மைதானத்திற்கு வரவில்லை.
தனது யூடியூப் சேனலில் பேசிய அஸ்வின், 'மே 18 அன்று நடக்கும் இந்தப் போட்டிக்கு ஏராளமான ரசிகர்கள் வருவார்கள். தோனி விளையாடுவாரா என்பது தெரியாவிட்டாலும், அவர் மைதானத்திற்கு வருவதை நாங்கள் எதிர்பார்க்கிறோம். வர்ணனை குழுவில் உள்ள பலரும் மைதானத்திற்கு வருகிறார்கள். அவர் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது' என்று தனது எதிர்பார்ப்பை வெளிப்படுத்தினார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது புள்ளிப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. 12 போட்டிகளில் விளையாடி 12 புள்ளிகளை பெற்றுள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக தோனி ஒரு 'இம்பாக்ட் பிளேயராக' களமிறங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் அஸ்வின் விளக்கினார். பிரஷாந்த் வீருக்கு பதிலாக தோனியை அணியில் சேர்க்க ஒரு வாய்ப்பு உள்ளது என்றும், அவர் ஒரு இம்பாக்ட் பிளேயராக செயல்படலாம் என்றும் யோசனை தெரிவித்தார். இருப்பினும், தோனி முழுமையாக விளையாடுவார் என்று தான் நினைக்கவில்லை என்றும், ஒருவேளை இம்பாக்ட் பட்டியலில் சேர்க்கப்படலாம் என்றும் அவர் கூறினார்.
இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட் விதிப்படி, சேஸிங் செய்யும் பட்சத்தில், அவரை இம்பாக்ட் பட்டியலில் வைத்திருக்கலாம். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக தோனியின் ஆட்டம் வலுவாகவே உள்ளது. அவர் 21 இன்னிங்ஸ்களில் 500 ரன்கள், 45.45 சராசரி மற்றும் 142.86 ஸ்ட்ரைக் ரேட்டுடன் நான்கு அரை சதங்களையும் அடித்துள்ளார்.
