2026 ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அடுத்தடுத்து சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. அணியின் முக்கிய வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் தற்காலிக கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு தரம்சாலா செல்லவில்லை என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் அணியை விட்டு விலகினார்களா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தற்போது 2026 ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ள மும்பை இந்தியன்ஸ் அணி, தரம்சாலாவில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது. இதற்காக மற்ற வீரர்கள் மற்றும் பயிற்சி ஊழியர்கள் தரம்சாலா சென்றடைந்தனர். ஆனால், கேப்டன் ஹர்திக் பாண்டியா இந்த பயணத்தில் இடம்பெறவில்லை. கடந்த வாரம் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியிலும் அவர் உடற்தகுதி பிரச்சனையால் விளையாடவில்லை. தற்போது அவரது உடற்தகுதியை மருத்துவக் குழுவினர் கண்காணித்து வருகின்றனர். அவர் முழு உடற்தகுதியை அடைந்தால் மட்டுமே போட்டிக்கு முன்பாக தரம்சாலா வருவார் என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஹர்திக் பாண்டியா இல்லாத நிலையில் அணியை வழிநடத்தி வரும் சூர்யகுமார் யாதவும் அணியுடன் செல்லவில்லை. சமீபத்தில் அவருக்கு பெண் குழந்தை பிறந்ததால், குடும்பத்தினருடன் நேரம் செலவிட அணி நிர்வாகம் சிறப்பு அனுமதி அளித்துள்ளது. பெங்களூரு போட்டிக்கு சில மணி நேரங்களுக்கு முன்புதான் அவர் ராய்ப்பூர் சென்று அணியுடன் இணைந்தார். அதேபோல, இன்றும் போட்டி தொடங்குவதற்கு சற்று முன்பு அவர் நேரடியாக மைதானத்திற்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
2026 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயணம் மிகவும் மோசமாகவே அமைந்துள்ளது. இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் 3 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. இன்னும் 3 லீக் போட்டிகள் மீதமுள்ளன. இந்த தொடரில் முன்னணி வீரர்களின் காயங்கள் மற்றும் கேப்டன்களின் வருகையில் உள்ள சிக்கல்கள் ரசிகர்களை மிகுந்த வேதனையில் ஆழ்த்தியுள்ளது. எஞ்சியுள்ள போட்டிகளிலாவது மும்பை அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆறுதல் வெற்றி பெற வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.