பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் 500 மீட்டர் சுற்றளவில் இயங்கி வந்த 717 டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரங்களுக்குள் மூட வேண்டும் என முதல்வர் ஜோசப் விஜய் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இந்த நடவடிக்கை தமிழகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தமிழக அரசின் இந்த உத்தரவின்படி, மாநிலம் முழுவதும் 5 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, மொத்தம் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளன. இந்த கடைகளின் மண்டலம் வாரியான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னை மண்டலத்தில் மட்டும் 99 கடைகள் மூடப்படுகின்றன. இதில் சென்னை தெற்கு, வடக்கு, மத்திய பகுதிகள், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளும் அடங்கும்.
கோவை மண்டலத்தில் 173 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கரூர், நீலகிரி, கோவை தெற்கு, வடக்கு, ஈரோடு, திருப்பூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கடைகள் அடங்கும். இதேபோல், மதுரை மண்டலத்தில் அதிகபட்சமாக 281 கடைகள் மூடப்படுகின்றன. மதுரை வடக்கு, சிவகங்கை, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, மதுரை தெற்கு, விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள கடைகள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
சேலம் மண்டலத்தில் 80 கடைகளும், திருச்சி மண்டலத்தில் 84 கடைகளும் மூடப்படுகின்றன. சேலம் மண்டலத்தில் வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, அரக்கோணம், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல் ஆகிய பகுதிகள் அடங்கும். திருச்சி மண்டலத்தில் தஞ்சாவூர், பெரம்பலூர், திருவாரூர், விழுப்புரம், நாகப்பட்டினம், திருச்சி, கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள கடைகள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் மதுக்கடைகளால் ஏற்படும் சமூகப் பிரச்சனைகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.