பாலியல் குற்றவாளிகளை தீவிரமாகக் கண்காணிக்கும் நோக்கில், 'SPECTRUM' என்ற புதிய 'கலர் கோடு' திட்டம் தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சரித்திரப் பதிவேடுகளைப் பராமரிப்பது போலவே, குற்றவாளிகளின் விவரங்களைச் சேகரித்து அவர்களைக் கண்காணிப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 10 தென் மாவட்டங்களில் இத்திட்டம் முதலில் செயல்படுத்தப்பட உள்ளது. ஈவ் டீசிங் முதல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வரையிலான பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கிய சுமார் 15,000 குற்றவாளிகளின் முழுமையான விவரங்கள் சேகரிக்கப்பட்டு, வரைபடமாக்கப்பட்டு கண்காணிக்கப்படும்.
குற்றவாளிகள் எட்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, அவர்களுக்கு வண்ணக் குறியீடுகள் வழங்கப்பட உள்ளன. கூட்டுப் பாலியல் வன்கொடுமை மற்றும் தொடர் போக்சோ குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு சிவப்பு குறியீடு வழங்கப்படும். பெண்களைத் தொடர்ச்சியாகத் துன்புறுத்தும் குற்றவாளிகளுக்கு ஆரஞ்சு குறியீடும், சைபர் மற்றும் ஆன்லைன் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு நீல நிற குறியீடும் வழங்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த 'கலர் கோடு' திட்டத்தின் மூலம், குற்றவாளிகளை வகைப்படுத்தி, அவர்களின் செயல்பாடுகளைத் துல்லியமாகக் கண்காணித்து, குற்றங்களைத் தடுப்பதற்கும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் காவல்துறை முனைப்பு காட்டி வருகிறது.