இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டிக்கு தொடைப் பகுதியில் ஏற்பட்டுள்ள காயத்தால், அவர் மேலும் சில வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என பிசிசிஐ மருத்துவக் குழு அறிவுறுத்தியுள்ளது. இதனால், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் விளையாடுவது சந்தேகத்திற்குரியதாகியுள்ளது.
முன்னதாக, இடது தொடைப் பகுதியில் ஏற்பட்ட வலி காரணமாக அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்களில் இருந்தும் நிதிஷ் ரெட்டி விலகியிருந்தார். தர்மசாலாவில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியின் போது பந்துவீசும்போது ஏற்பட்ட காயத்தால், லக்னோவில் நடந்த இரண்டாவது போட்டியில் அவருக்கு ஓய்வளிக்கப்பட்டது. சென்னையில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் மீண்டும் விளையாடிய அவர், 6 ஓவர்கள் வீசி 42 ரன்கள் கொடுத்து விக்கெட் எதையும் எடுக்கவில்லை. போட்டிக்குப் பிறகு மீண்டும் தொடைப் பகுதியில் அசௌகரியம் ஏற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
நிதிஷ் ரெட்டி தற்போது பெங்களூரில் உள்ள பிசிசிஐ-யின் சிறப்பு செயல்பாட்டு மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் முழு உடற்தகுதியை அடைய குறைந்தது ஒரு மாதமாவது ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இங்கிலாந்து ஒருநாள் தொடரில் அவர் பங்கேற்பது கடினம் என்றாலும், அதன்பின்னர் நடைபெறும் ஜிம்பாப்வே டி20 தொடரில் அவர் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குள் அவர் முழு உடற்தகுதியை அடைவதை பிசிசிஐ இலக்காகக் கொண்டுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி வீரர்கள் வெவ்வேறு குழுக்களாக அங்கு செல்லவுள்ளனர். கேப்டன் சுப்மன் கில் மற்றும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கே.எல். ராகுல் ஆகியோர் பயிற்சிகளை முன்கூட்டியே தொடங்க முன்னதாகவே அங்கு செல்லவுள்ளனர். மற்ற வீரர்கள் ஜூலை 12 ஆம் தேதிக்குள் அணியுடன் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொடரின் முதல் ஒருநாள் போட்டி பர்மிங்காமில் நடைபெறவுள்ளது. ஏற்கனவே ஹர்திக் பாண்டியா கால் காயத்தால் விலகியிருக்கும் நிலையில், நிதிஷ் குமார் ரெட்டியின் காயமும் இந்திய அணிக்கு கூடுதல் சவாலாக அமைந்துள்ளது.