தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த 17-வது சட்டமன்றத் தேர்தலில், த.வெ.க. கட்சி 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்துள்ளது. இதன் மூலம், 59 ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்து வந்த தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய திராவிடக் கட்சிகளின் ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளது. த.வெ.க. கட்சிக்கு 34.02% வாக்குகள் கிடைத்துள்ளன. அதாவது, 1 கோடியே 72 லட்சத்து 26 ஆயிரத்து 209 பேர் அக்கட்சிக்கு வாக்களித்துள்ளனர்.
இந்தத் தேர்தலில், ஆளும் கட்சியாக இருந்த தி.மு.க. 59 தொகுதிகளில் வெற்றி பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. அக்கட்சிக்கு 24.19% வாக்குகள் கிடைத்துள்ளன. தி.மு.க.வுக்கு 1 கோடியே 19 லட்சத்து 29 ஆயிரத்து 144 பேர் வாக்களித்துள்ளனர். அதேபோல், பிரதான எதிர்க்கட்சியாக இருந்த அ.தி.மு.க. 47 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. அ.தி.மு.க.வுக்கு 21.21% வாக்குகள் கிடைத்துள்ளன. அக்கட்சிக்கு 1 கோடியே 4 லட்சத்து 62 ஆயிரத்து 146 பேர் வாக்களித்துள்ளனர்.
பொதுவாக, தேர்தலில் போட்டியிடும் கட்சிகளுக்கு, அக்கட்சியின் உறுப்பினர்கள் மட்டுமின்றி, பொதுமக்களும் பெருமளவில் வாக்களிப்பார்கள். ஆனால், இந்த சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வுக்கு அக்கட்சித் தொண்டர்களே வாக்களிக்கவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. தி.மு.க.வில் 2 கோடி உறுப்பினர்கள் இருப்பதாக அக்கட்சித் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. ஆனால், தேர்தலில் 1 கோடியே 19 லட்சத்து 29 ஆயிரத்து 144 வாக்குகளே கிடைத்துள்ளன. இதன் மூலம், சுமார் 80 லட்சம் தி.மு.க. தொண்டர்கள் வாக்களிக்கவில்லை என்பது தெரிகிறது.
இதேபோல், அ.தி.மு.க.வில் 1 கோடியே 90 லட்சம் உறுப்பினர்கள் இருப்பதாக அக்கட்சித் தலைமை அறிவித்திருந்தது. ஆனால், தேர்தலில் 1 கோடியே 4 லட்சத்து 62 ஆயிரத்து 146 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். இதன் மூலம், சுமார் 85 லட்சம் அ.தி.மு.க. தொண்டர்கள் வாக்களிக்கவில்லை எனத் தெரிய வந்துள்ளது. இந்த நிலை, இரு கட்சித் தலைமைக்கும் புதிய சந்தேகத்தை எழுப்பியுள்ளது. உறுப்பினர் சேர்க்கையை அதிகரிக்கச் சொன்னபோது, கட்சி நிர்வாகிகள் முறைகேடாக உறுப்பினர்களைச் சேர்த்து, தவறான தகவலை கட்சித் தலைமைக்கு அளித்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. எது எப்படியோ, இரு பெரும் கட்சிகளும் புதிய கட்சியான த.வெ.க.விடம் படுதோல்வி அடைந்துள்ளன.