காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா மீதான பண மோசடி வழக்கு இன்று டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள சிகோபூர் பகுதியில் ராபர்ட் வதேரா சுமார் 3.5 ஏக்கர் நிலத்தை வாங்கியிருந்தார். இந்த நிலத்தை பின்னர் டி.எல்.எஃப் நிறுவனத்திற்கு சுமார் ரூ.58 கோடிக்கு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இந்த பரிவர்த்தனையில், தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி ராபர்ட் வதேரா அதிக விலைக்கு நிலத்தை விற்றதாகவும், டி.எல்.எஃப் நிறுவனத்திடம் இருந்து சொத்துக்கள் வாங்க சலுகைகளை எதிர்பார்த்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த நிலப் பரிமாற்றம் சட்டவிரோதமானது எனக்கூறி, நிலப்பதிவை பதிவுத்துறை ரத்து செய்தது.
இந்த நில மோசடி தொடர்பான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை குறித்து அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. இதன் அடிப்படையில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக ராபர்ட் வதேரா மற்றும் பிற குற்றம் சாட்டப்பட்டவர்கள் இன்று டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது.
இன்று நீதிமன்றத்தில் ஆஜரான ராபர்ட் வதேராவுக்கு, பண மோசடி வழக்கில் ரூ.50,000 மதிப்பிலான தனிநபர் பிணை மற்றும் ஒருநபர் ஜாமீன் உத்தரவாதத்தின் அடிப்படையில் டெல்லி சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. வழக்கின் அடுத்த விசாரணை வரும் ஜூலை 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.