சென்னைவாசிகள் கவனத்திற்கு! சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பிரம்மாண்ட மறுசீரமைப்பு பணிகள் காரணமாக, சில விரைவு ரயில்களின் சேவையில் தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பயணிகளின் ஒத்துழைப்பை கோரியுள்ளது தெற்கு ரயில்வே.
சென்னை கோட்டம், தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரூபாய் 842 கோடி ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் கூடிய மறுசீரமைப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பயணிகளுக்கு மேம்பட்ட சேவையை வழங்கும் நோக்கில், வருகை மற்றும் புறப்பாடு முனையங்கள், விசாலமான காத்திருப்பு அரங்குகள், லிப்ட், எஸ்கலேட்டர் போன்ற பல்வேறு நவீன வசதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, வருகை மற்றும் பார்சல் நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த பணிகள் காரணமாக, ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 20-ஆம் தேதி வரை, ஒன்பது முக்கிய விரைவு ரயில்களின் சேவையில் தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, தஞ்சாவூர் – சென்னை எழும்பூர் உழவன் எக்ஸ்பிரஸ், கொல்லம் – சென்னை எழும்பூர் அனந்தபுரி எக்ஸ்பிரஸ், மங்களூர் – சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ், மற்றும் சேலம் – சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள், குறிப்பிட்ட நாட்களில் தாம்பரம் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரயில்கள் தாம்பரம் வரை மட்டுமே வந்து செல்லும்.
அதேபோல், சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட வேண்டிய உழவன் எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ், மங்களூர் எக்ஸ்பிரஸ் மற்றும் ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களும், குறிப்பிட்ட நாட்களில் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்தே புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திருச்சிராப்பள்ளி – சென்னை எழும்பூர் ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் விரைவு ரயில், மாம்பலம் ரயில் நிலையத்துடன் தனது சேவையை நிறுத்திக்கொள்ளும்.
இது தவிர, அகமதாபாத் – திருச்சிராப்பள்ளி மற்றும் திருச்சிராப்பள்ளி – அகமதாபாத் வாராந்திர சிறப்பு ரயில்கள், மாற்றுப் பாதையில் இயக்கப்பட உள்ளன. இதன் காரணமாக, இந்த சிறப்பு ரயில்கள் அரக்கோணம், பெரம்பூர், சென்னை எழும்பூர் மற்றும் தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில் குறிப்பிட்ட நாட்களில் நிற்காது என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மேலும், ஆகஸ்ட் 22-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 30-ஆம் தேதி வரை, புறநகர் மின்சார ரயில் சேவைகளிலும் சில தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் செல்லும் மூன்று புறநகர் ரயில்கள் இந்த நாட்களில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் இந்த முக்கிய மறுசீரமைப்பு பணிகளுக்கு பயணிகளின் ஒத்துழைப்பை தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த தற்காலிக மாற்றங்கள் பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தினாலும், எதிர்காலத்தில் மேம்பட்ட ரயில் பயண அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
