முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் நேற்று தொடங்கியது. ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உரையை ஆங்கிலத்தில் வாசித்த நிலையில், சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அதை தமிழில் வாசித்தார். இதைத் தொடர்ந்து, சட்டப்பேரவை கூட்டம் நிறைவடைந்தது.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், கூட்டத்தொடரின் அட்டவணையை வெளியிட்டார். அதன்படி, ஜூன் 19 அன்று மறைந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் நல்லகண்ணு, முன்னாள் பேரவைச் செயலாளர் சி.கு. இராமசாமி, திரைப்படத் தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சௌத்ரி, கே.ராஜன் மற்றும் இயக்குநர் பாரதிராஜா ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. ஜூன் 20 மற்றும் 21 தேதிகளில் சனி, ஞாயிறு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 22ஆம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்குகிறது. ஜூன் 23ஆம் தேதி விவாதம் தொடர்வதுடன், அன்றே அரசின் பதிலுரையும் வழங்கப்படும். வழக்கம்போல் காலை 9.30 மணிக்கு தொடங்கும் கூட்டத்தொடரில், உறுப்பினர்களின் கேள்விகளுக்கான பதில்களை சம்பந்தப்பட்ட துறைகளிடமிருந்து பெறுவதில் காலதாமதம் ஏற்படும் என்பதால், இந்த முறை கேள்வி-பதில் நேரம் இடம்பெறாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் உரை மற்றும் பேரவை நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்புவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், மானிட்டர்கள் செயல்படாத புகாரை சரிசெய்ய தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் கூறினார். அதிமுக சட்டமன்றக் குழு தலைவர் யார் என்பதும் நாளைய கூட்டத்தொடரில் அறிவிக்கப்படும்.