மும்பையில் பிளாட்பாரம் டிக்கெட் இருந்தும் ரூ.500 அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரயில்வேயின் விதிமுறைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
மும்பையைச் சேர்ந்த ஆதித்யா என்பவர், தனது உறவினரை ரயில் நிலையத்தில் வழியனுப்பச் சென்றுள்ளார். ரயில் 5 மணி நேரம் தாமதமானதால், காத்திருந்து உறவினரை ரயிலில் ஏற்றிவிட்டு வெளியே வந்துள்ளார். அப்போது, டிக்கெட் பரிசோதகர் அவரிடம் சோதனை நடத்தியுள்ளார். ஆதித்யாவிடம் இருந்த பிளாட்பாரம் டிக்கெட் காலாவதியாகிவிட்டதாகக் கூறி, ரூ.500 அபராதம் விதித்துள்ளார்.
ரயில் தாமதமானதை விளக்கியும், பரிசோதகர் அபராதம் விதித்ததாக ஆதித்யா தெரிவித்துள்ளார். ரயில்வே விதிகளின்படி, பிளாட்பாரம் டிக்கெட் வாங்கியதிலிருந்து 2 மணி நேரத்திற்குள் ரயில் நிலையத்தை விட்டு வெளியேற வேண்டும். இந்த காலக்கெடுவை மீறினால் அபராதம் விதிக்கப்படும். இந்த விதியின் அடிப்படையிலேயே ஆதித்யாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தனக்கு விதிக்கப்பட்ட அபராதம் குறித்து ஆதித்யா சமூகவலைதளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். ரயில் தாமதத்திற்கு யார் பொறுப்பு என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.